Published : 14 Aug 2023 05:17 PM
Last Updated : 14 Aug 2023 05:17 PM

அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி மனு

செந்தில் பாலாஜி | கோப்புப்படம்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், தனக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, செந்தில் பாலாஜியை ஆக.7-ம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து ஆக.12-ம் தேதி வரையிலான 5 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

கடந்த, ஆக.12-ம் தேதியுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஆக.25-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் திங்கள்கிழமை முறையீடு செய்யப்பட்டது. "அமலாக்கத் துறை தன்னிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் 120 பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகை மற்றும் அதுதொடர்பான 2,700 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த அனைத்து ஆவணங்களையும் தனக்கு வழங்கிட அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், இந்த வழக்கு தொடங்கியதில் இருந்து தன்னிடம் விசாரணை நடத்தியது, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது உட்பட அனைத்து ஆவணங்களையும் தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளதால், ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கைப்படி, ஆவணங்களின் நகல்களை மனுதாரருக்கு வழங்க அமலாக்கத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு வரும் புதன்கிழமை விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x