Published : 12 Aug 2023 03:22 PM
Last Updated : 12 Aug 2023 03:22 PM

அமைச்சர் அன்பில் மகேஸுக்கு திடீர் உடல்நல பாதிப்பு: தருமபுரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

உடல்நலக் குறைவு காரணமாக தருமபுரி அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் தனது காரில் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.

தருமபுரி: அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க தருமபுரி மாவட்டம் வழியாக சென்றபோது பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடக்கவுள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலத்தை கடந்து தருமபுரி மாவட்டம் வழியாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சனிக்கிழமை காரில் பயணித்துக் கொண்டிருந்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை நெருங்கியபோது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனவே காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தினர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் அஜீரணம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை முடித்த பின்னர் அவர் கிருஷ்ணகிரி புறப்பட்டு செல்ல இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், மருத்துவர்கள் அமைச்சர் அன்பில் மகேஸிடம், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு செல்ல பரிந்துரைத்தனர். அதன்படி, அவர் காரிமங்கலத்தில் இருந்து தனது காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதனிடையே அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து திமுகவினர் உள்ளிட்டோர் மருத்துவமனை முன்பு திரண்டனர். இதனால், பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x