Last Updated : 12 Aug, 2023 01:52 AM

 

Published : 12 Aug 2023 01:52 AM
Last Updated : 12 Aug 2023 01:52 AM

அரசு போக்குவரத்து கழகத்தில் புத்தக வருகை பதிவேடு பயன்படுத்த வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் கட்டாயம் புத்தக வடிவிலான வருகை பதிவேடு பயன்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காமராஜ் நாடார் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஜெ.எஸ்.செல்வகுமார், உயர் நீதிமன்ற கிளையில் 2016-ல் தாக்கல் செய்த மனுவில், "நெல்லை அரசு போக்குவரத்துக் கழக மண்டலத்தில் 12 கிளைகளில் ஆயிரம் பேருந்துகள், 2 ஆயிரம் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் 5 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இந்த கிளைகளில் ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு வருகை பதிவேடு வைப்பதில்லை. ஓட்டுநர்கள், நடத்துனர்களால் தங்களது வருகையை பதிவு செய்ய முடியவில்லை.

இதனால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் ஓட்டுநர், நடத்துனர்கள் பணிக்கு வந்தாலும் அவர்கள் பணிக்கு வரவில்லை என அதிகாரிகளே குறித்துக் கொண்டு பல்வேறு வழிகளில் தண்டிக்கின்றனர்.

இதனால் அனைத்து கிளைகளிலும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அச்சிடப்பட்ட வருகை பதிவேடு வைக்குமாறு 2016ல் மனு அளித்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அரசு போக்குவரத்து கழகத்தின் அனைத்து கிளைகளிலும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு அச்சிடப்பட்ட வருகை பதிவேடு வைக்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2019 முதல் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை பின்பற்றப்படுகிறது. தற்போது புத்தக வடிவிலான வருகை பதிவேடு பயன்பாட்டில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளில் தொழில் நிறுவனங்களில் வருகை பதிவேடு முறை பின்பற்ற வேண்டும். இதை தொழிலாளர் ஆய்வாளர் உறுதி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்போது புத்தக வருகை பதிவேடு முறை இல்லை, 2019 முதல் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு பயன்படுது்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை இருந்தாலும் புத்தக வருகை பதிவேடும் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு உறுதியாகிவிடும். தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் ஓட்டுநர், நடத்துனர்கள் பணிக்கு வந்தாலும் அவர்கள் பணிக்கு வரவில்லை என குறிப்பிட்டு தண்டிப்பது என்பதை ஏற்க முடியாது.

இதனால் அரசு போக்குவரத்து கழக அனைத்து கிளைகளிலும் புத்தக வடிவிலான வருகை பதிவு முறையை பின்பற்ற வேண்டும். இதை தொழிலாளர் ஆய்வாளர் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x