Published : 11 Aug 2023 06:10 AM
Last Updated : 11 Aug 2023 06:10 AM

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.515 கோடியில் கோத்ரெஜ் நிறுவனத்தின் புதிய ஆலை - முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.515 கோடியில் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தலைமைச் செயலகத்தில், நேற்று மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, துறை செயலர் ச.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் நிசாபா கோத்ரெஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை: கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில், ரூ.515 கோடி முதலீட்டில் புதியஉற்பத்தி ஆலையை நிறுவ முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தானியங்கி வாகனங்கள், ஜவுளி, காலணி மற்றும் தோல்பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வான்வெளி மற்றும்பாதுகாப்பு என பல்வேறு வகையான தொழில்களை நிறுவிட ஊக்கமளிப்பதன் மூலம், முதலீடுகள் மேற்கொள்வதற்கு உகந்த மாநிலமாக தமிழகம் தன்னை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.

தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒருட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட வேண்டும் என்று முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை விரைவில் அடைய, அதிக முதலீடுகளை ஈர்த்து, தமிழக இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு, அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

446 பேருக்கு வேலைவாய்ப்பு: கோத்ரெஜ் குழுமத்தின் ஒரு அங்கமான கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், இந்தியாவில் 33 இடங்களில் தனது உற்பத்திஅலகுகளை நிறுவியுள்ளது. தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகரில் ஒரு உற்பத்தி மையத்தை நிறுவியுள்ள இந்நிறுவனம், மேம்பட்ட உற்பத்தி மையத்தின் ஒரு சிறப்புமிக்க நிறுவனம் என்பதை இலக்காகக் கொண்டு ஒரு புதிய அதிநவீன உற்பத்தி ஆலையை நிறுவத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், ரூ.515 கோடி முதலீடு மற்றும் 446 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சோப்புகள், முக அழகு க்ரீம்கள், தலைமுடி பராமரிப்பு சாதனங்கள் மற்றும் கொசு ஒழிப்பான் போன்றவற்றுக்கு ஒரு உற்பத்தி மையத்தை நிறுவ உள்ளது.

50 சதவீதம் பெண்கள்: இந்தத் திட்டத்தில், 50 சதவீதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும். மேலும்,திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தை நிறுவ, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு மற்றும் கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா,தொழில்துறை செயலர் ச.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் நிசாபா கோத்ரெஜ், மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் சுதிர் சீதாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x