Published : 03 Aug 2023 02:29 PM
Last Updated : 03 Aug 2023 02:29 PM

தூத்துக்குடி - மதுரை இடையே பராமரிப்பு இல்லாத நான்குவழிச் சாலை: விபத்தில் சிக்கும் வாகனங்கள்

தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச்சாலையில் எட்டயபுரம் அருகே தாப்பாத்தி பகுதியில், சாலையின் மேலடுக்கு தார்க்கலவை பெயர்த்து எடுக்கப்பட்டு மீண்டும் சீரமைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளது

கோவில்பட்டி: தூத்துக்குடி முதல் மதுரை இடையேயான தேசிய நான்குவழிச் சாலை பராமரிப்பு இல்லாததால் மிக மோசமாக காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.

தூத்துக்குடி - மதுரை இடையிலான மாநில நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலையாக கடந்த 2007-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. இவ்வழியே தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக சாலை பராமரிப்பு பணி என்ற பெயரில் சாலையின் மேலடுக்கு தார் கலவையை பல இடங்களில் பெயர்த்து எடுத்துவிட்டனர்.

அந்த இடத்தில் புதிதாக தார்ச்சாலை அமைப்பதில் மிகவும் தாமதப்படுத்துகின்றனர். 10 நாட்கள் வேலை நடந்தால் அதன்பின் பலமாதங்களுக்கு பணியே நடப்பதில்லை. இதனால் சாலையின் தரம் நாளுக்கு நாள் குறைந்து, வாகனங்களின் டயர் தேய்மானம் அதிகமாகி வருகிறது. எட்டயபுரம் அருகே சோழபுரம், சிந்தலக்கரை, தாப்பாத்தி செல்லும் வழி ஆகிய இடங்களில் மேலடுக்கு தார் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் 80 கி.மீ. வேகத்தில் வரும் போது, மிகவும் சிரமத்துடன் செல்கின்றன.

சில நேரங்களில் கார், வேன்களில் அலசல் ஏற்பட்டு, சாலையோரப் பள்ளத்துக்கு தள்ளப்படுகின்றன. மேலும், தாப்பாத்தி, சிந்தலக் கரை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளதால், கனரக லாரிகள், கார்களின் டயர்கள் வெடித்து விபத்துகளில் சிக்குகின்றன. எளிதான போக்குவரத்துக்கு என அமைக்கப்பட்ட தேசிய நான்குவழிச் சாலையில் பயணிப்பது ஆபத்தை விளைவிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, தூத்துக்குடி - மதுரை தேசிய நான்குவழிச் சாலையில் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொண்டு விபத்துகளை தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரியாத விளக்குகள்: தேசிய நான்குவழிச்சாலையில் உள்ள ஒவ்வொரு கிராம விலக்குகளிலும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் பல இடங்களில் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் வரக்கூடிய வாகனங்கள் ‘யு’ வளைவு தெரியாமல் விபத்துகளில் சிக்குகின்றன. விளக்குகளையும் பராமரிக்காமல் அப்படியே கைவிட்டுள்ளனர்.

சுங்கக் கட்டணத்தில் கவனம்: தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியாபுரம், மதுரை அருகே எலியார்பட்டி ஆகிய இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால், தினமும் லட்சக் கணக்கான ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால், சாலையை சீரமைப்பதில் மெத்தனம் காட்டப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x