Published : 03 Aug 2023 06:35 AM
Last Updated : 03 Aug 2023 06:35 AM

சுதந்திர தின விழா கொண்டாட்டம்: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதால், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிககப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

சென்னை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவுகேட் பகுதியிலேயே நிறுத்தி மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்படுகிறது. வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனை செய்கின்றனர்.

பார்வையாளர் தடை தீவிரம்: விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மல்டிலெவல் கார் பார்க்கிங் பகுதிக்குள் நீண்ட நேரமாக நிற்கும் கார்களை வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனையிட்டு விசாரிக்கின்றனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன், சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும், குறிப்பாக விமானங்கள் நிற்கும் பகுதிகளிலும் தீவிரமாக சோதனையிட்டு கண்காணித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் வருகைக்கான தடை ஏற்கெனவே கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அமலில் இருப்பதால் அது மேலும் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.

ஆக.20 வரை பாதுகாப்பு அமல்: விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் ஏற்கெனவே உள்ள சிசிடிவி கேமராக்களுடன் தற்போது கூடுதலாக சிசிடிவி கேமராக்களை அமைத்து, விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

அதேபோல் விமானப் பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனால், உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்துக்கு முன்பாகவும் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் 20-ம் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்புவிதிமுறைகள் அமலில் இருக்கும். தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு வரும் 13,14,15 ஆகிய தேதிகளில் உச்சகட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படுமென விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x