Published : 02 Aug 2023 05:32 AM
Last Updated : 02 Aug 2023 05:32 AM

ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கை தொடரும்: டிஜிபி சங்கர் ஜிவால் உறுதி

டிஜிபி சங்கர் ஜிவால்

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு வந்து, காயமடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாதனிடம் நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் டிஜிபி கூறியதாவது:

கூடுவாஞ்சேரி போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்குரிய வகையில் வந்த வாகனத்தை நிறுத்தி விசாரிக்க முற்பட்டுள்ளனர். அப்போது, உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளரை, காரில் வந்தவர்கள் தாக்கியுள்ளனர். அவர்கள் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உதவி ஆய்வாளர் தற்போது நலமாக உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தேன் தப்பிச் சென்ற 2 பேர் மீதும் கொலை வழக்குகள் உள்ளன. அவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கை தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி அருங்கல் பகுதியில் என்கவுன்ட்டர் நடந்த இடத்தை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எப்படி என்கவுன்ட்டர் நடந்தது என்று அவரிடம் போலீஸார் விளக்கினர். தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். தப்பியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x