Published : 31 Jul 2023 09:58 AM
Last Updated : 31 Jul 2023 09:58 AM

முதுமலைக்கு குடியரசுத் தலைவர் வருகை: யானைகள் முகாம் தற்காலிக மூடல்

முதுமலை: முதுமலைக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை தர உள்ளதால், இன்று முதல், 5-ம் தேதி வரை, தெப்பக்காடு யானைகள் முகாம் தற்காலிகமாக மூடப்படுகிறது.

நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், தாயைப் பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மியை பராமரித்து வந்த பழங்குடி தம்பதியினர் பொம்மன், பெள்ளி இடையேயான பாச உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவண படத்துக்கு, ‘ஆஸ்கர்’ விருது கிடைத்தது. இதன் மூலம் யானை குட்டிகள், பாகன் தம்பதி உலகப் புகழ் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பாகன் தம்பதியை சந்திக்க, ஆகஸ்ட் 5-ம் தேதி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் வருகிறார். அவரை வரவேற்க, பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, இன்று முதல் ஆறு நாட்களுக்கு தெப்பக்காடு யானைகள் முகாம் தற்காலிகமாக மூடப்படுவதாகத் தெரிவித்தனர்.

வனத்துறையினர் கூறும்போது, ‘குடியரசுத் தலைவர் வருகை முன்னிட்டு, தெப்பக்காடு யானைகள் முகாம், இன்று முதல் 5 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. யானை முகாமுக்குள் மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. மற்ற இடங்களுக்கு செல்லலாம்’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x