Last Updated : 28 Jul, 2023 01:59 PM

 

Published : 28 Jul 2023 01:59 PM
Last Updated : 28 Jul 2023 01:59 PM

சிக்னலின்றி அவசர உதவி கிட்டாத வனக்கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை: சிகரமாகனப்பள்ளி மக்கள் மகிழ்ச்சி

கொங்கனப்பள்ளி - கே.கொத்தூர் இடையே செல்போன் கோபுரம் அமைக்க பீடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே செல்போன் சிக்னல் கிடைக்காததால் அவசர உதவியைப் பெற முடியாமல் பரிதவித்த வனக் கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் சிகரமாகனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தோட்ட கணவாய், மேட்டுப்பாளையம், கே.கொத்தூர், பூதிமூட்லு, சிகரமானப்பள்ளி மற்றும் கொங்கனப்பள்ளி கிராமங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வனத்தையொட்டியுள்ள இக்கிராமங்களில் செல்போன் சிக்னல் கிடைப்பதில்லை.

குறிப்பாக கொங்கனப்பள்ளி கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இக்கிராமங்கள் வனத்தையொட்டி இருப்பதால், அடிக்கடி கிராமத்துக்குள் வன விலங்குகள் புகுந்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இதுபோன்ற அவசர நேரத்தில் வனத்துறையைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையிருந்து வருகிறது.

இதையடுத்து, தங்கள் பகுதிக்கு செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பி.எஸ்.என்.எல் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இக்கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேப்பனப்பள்ளி அருகே வனத்தையொட்டியுள்ள கொங்கனப்பள்ளி கிராமம்.

இது தொடர்பாக கொங்கனப்பள்ளி கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் செல்போன் இல்லாத வீடுகள் இல்லை. ஆனால், சிக்னல் கிடைப்பதில்லை. இதனால், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்பட்டால் அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் அழைக்க முடிவதில்லை.

மேலும், எங்கள் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஊருக்குள் வன விலங்குகள் வந்தால், வனத்துறைக்கும் தகவல் அளிக்க முடியாது. இதனால், விடிய, விடிய அச்சத்துடனும் வீட்டில் உறங்காமலும் இருந்து வருகிறோம்.

எங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்றால் 1 கிமீ தூரம் காப்புக்காடு வழியாகச் சென்று உயரமான மலைக்குன்று பகுதியில் நின்று பேச வேண்டும். இதேபோல, இங்குள்ள ரேஷன் கடையில் பயோ-மெட்ரிக்கும் செயல்படாது. இதனால், பழைய முறையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகிறோம்.

தற்போது, கொங்கனப்பள்ளி - கே.கொத்தூர் இடையே பி.எஸ்.என்.எல் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடப்பதால் மகிழ்ச்சியளிக்கிறது, என்றனர்.

இது தொடர்பாக பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கூறும்போது, “இங்கு 130 அடி உயரத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி ஓரிரு மாதங்களில் நிறைவு பெற்றவுடன் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x