Published : 28 Jul 2023 06:59 AM
Last Updated : 28 Jul 2023 06:59 AM

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் வேலூர் நீதிமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி. ஆஜர்

வேலூர்: வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் திமுக எம்.பி.யான கதிர் ஆனந்த் நேற்று வேலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

வேலூர் தொகுதி மக்களவை உறுப்பினராக உள்ள டி.எம்.கதிர்ஆனந்த், கடந்த 2013-14 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, 2015 மார்ச் 29-ல் வருமான வரியை தாக்கல் செய்தார். அப்போது அவர், ரூ.1 கோடியே 4 லட்சத்து 94 ஆயிரத்து 60-யை வரியாக செலுத்தினார்.

ஆனால், உரிய காலத்துக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி, கதிர் ஆனந்துக்கு வருமான வரித்துறை சார்பில் மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு, அவர் விளக்கம் அளிக்கவில்லை.

இதையடுத்து, வேலூர் 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (ஜே.எம்-1) வருமான வரித்துறை சார்பில் கதிர் ஆனந்த் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் கதிர்ஆனந்த் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது உயர் நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணை நடந்தது. அப்போது, கீழமை நீதிமன்றத்தை நாடுமாறு கதிர் ஆனந்துக்கு உத்தரவிட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, வருமான வரித் துறை வழக்கில் ஆஜராகுமாறு கதிர் ஆனந்த்துக்கு வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில்,வேலூர் 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சத்யகுமார் முன்னிலையில் கதிர்ஆனந்த் நேற்று ஆஜரானார். அப்போது வழக்கை ஆக.25-க்கு மாஜிஸ்திரேட் தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x