Published : 26 Jul 2023 12:57 AM
Last Updated : 26 Jul 2023 12:57 AM

ஒகேனக்கல்லை வந்தடைந்தது காவிரி தண்ணீர் - நீர்வரத்து 10,000 கனஅடியைக் கடக்க வாய்ப்பு

தருமபுரி: கர்நாடகா மாநில அணைகளில் இருந்து காவிரியாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று (ஜூலை 25) மாலை தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை அடைந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 19-ம் தேதி காலை அளவீட்டின்படி நீர்வரத்து விநாடிக்கு 1,200 கன அடி என்ற அளவில் இருந்தது. அதற்கு அடுத்த நாளான 20-ம் தேதி காலை அளவீட்டின்போது விநாடிக்கு 1,000 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. அன்றிலிருந்து நேற்று (ஜூலை 25) மாலை வரை விநாடிக்கு 1,000 கன அடியாகவே நீர்வரத்து தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில், பெற்று மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 2,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. 6 மணியளவில் இது விநாடிக்கு 3,000 கன அடியாகவும், இரவு 9 மணி அளவீட்டின்போது விநாடிக்கு 5,000 கன அடியாகவும் உயர்ந்தது. தொடர்ந்தும் படிப்படியாக நீர்வரத்து அளவு அதிகரித்து வருகிறது.

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள காவிரியாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜ சாகர்(கேஆர்எஸ்) அணைகளுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. இதனால் இவ்விரு அணைகளிலும் நீர்மட்டம் சீராக உயர்ந்து வந்தது. நீர்மட்டம் அணைகளின் முழு கொள்ளளவை எட்டும் நிலையிலும் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அவ்விரு அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் தமிழகத்தை நோக்கி காவிரியாற்றில் கடந்த சில நாட்களாக வெளியேற்றப்பட்டு வந்தது.

கடந்த 22-ம் தேதி கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து விநாடிக்கு 4 ஆயிரத்து 987 கனஅடி வீதம் தமிழகத்தை நோக்கி காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அவ்விரு அணைகளுக்கும் வரும் நீரின் அளவின் உயர்வுக்கு ஏற்ப காவிரியாற்றில் வெளியேற்றப்படும் வரும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி கபினியில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 12 ஆயிரத்து 600 கனஅடியும் என விநாடிக்கு 22 ஆயிரத்து 600 கனஅடியாக தமிழகத்தை நோக்கி காவிரியாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தை நோக்கி திறக்கப்பட்ட காவிரி உபரி நீர் நேற்று மாலை தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இன்று மாலைக்குள் இந்த தண்ணீர் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'இன்று (ஜூலை 26) காலைக்குள் ஒகேனக்கல்லைக் கடந்து மேட்டூர் அணைக்கு செல்லும் நீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியைக் கடக்க வாய்ப்புள்ளது’ என தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x