Published : 25 Jul 2023 06:20 AM
Last Updated : 25 Jul 2023 06:20 AM

லஞ்ச வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர் இறந்துவிட்டால் சட்டப்பூர்வ ஆதாரங்களை நிரூபித்தால் மட்டுமே பறிமுதல் சொத்துக்கு வாரிசுகள் உரிமை கோரலாம்

சென்னை: லஞ்ச வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர் இறந்து விட்டால் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கான சட்டப்பூர்வமான ஆதாரங்களை நிரூபித்தால் மட்டுமே வாரிசுகள் அதற்கு உரிமைகோர முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக பணிபுரிந்தவர் தன்ராஜ்.

இவர்அந்த பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றின் உரிமத்தை புதுப்பித்துக் கொடுப்பதற்காக ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் கடந்த 2020 டிசம்பரில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருடைய வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.66 லட்சம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளும், ரூ.56.66 லட்சம் ரொக்கமும், சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஜாமீனில் வெளியே வந்த தன்ராஜ் மீதான வழக்கு விசாரணை திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த 2021 மே மாதம் தன்ராஜ் திடீரென மரணமடைந்து விட்ட நிலையில் தன்ராஜிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் சொத்து ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி அவரது மனைவி அங்கயற்கண்ணி, மகன் ஹரிபிரதாப், மகள் ஹரிபிரியா ஆகியோர் திருவாரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதையடுத்து மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘ஓர் அரசு ஊழியர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர் இறந்து விட்டால் அந்த சொத்துகள் சட்டப்பூர்வமாக வந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே அந்த சொத்துகளுக்கு வாரிசுகள் உரிமை கோரமுடியும். மாறாக உரிய ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் உரிமை கோர முடியாது, எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x