Published : 25 Jul 2023 05:43 AM
Last Updated : 25 Jul 2023 05:43 AM

வரி வசூல் செய்வதில் 4-ம் இடத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி: வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் பெருமிதம்

சென்னை: நாடு முழுவதும் அதிகளவு வரி வசூல் செய்வதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 4-ம் இடத்தில் உள்ளன என, வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரி அலுவலகம் சார்பில், 164-வது வருமானவரி தின விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், வருமான வரித்துறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்துக்கான மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தொடங்கி வைத்தார்.

விழாவில், வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் மற்றும் வருமான வரி தலைமை இயக்குநர் (புலனாய்வு) சுனில் மாத்தூர் பேசியதாவது: கடந்த 1860-ம் ஆண்டு இதே நாளில், நாட்டில் முதன்முறையாக வருமானவரியை ஜேம்ஸ் வில்சன் என்பவர் அறிமுகப்படுத்தினார். அதைக் குறிக்கும் வகையில் இந்தநாளை ஆண்டுதோறும் வருமானவரி தினமாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது.

1922-ம் ஆண்டு வருமானவரி துறை உருவாக்கப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, 1961-ம்ஆண்டு முதல் வருமானவரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1995-96-ம் ஆண்டில் நாட்டின் மொத்த வரி வசூல் ரூ.35 ஆயிரம் கோடியாக இருந்தது. இது மத்திய அரசின் மொத்த நேரடி வரி வசூலிப்பில் 30 சதவீதம் பங் களிப்பாகும்.

நாட்டின் நேரடி வரி வசூல் ஆண்டுதோறும் அதிகரித்தது. 2009-10-ம் ஆண்டில் நேரடி வரி வசூல் 60 சதவீதமாக உயர்ந்தது. கடந்த 2022-23-ம் ஆண்டில் நேரடி வரி வசூல் ரூ.16.6 லட்சம் கோடியாக அதிகரித்தது. இது அதற்கு முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகமாகும்.

வருமான வரியும், கார்ப்பரேட் வரியும் உள்ளடக்கிய நேரடி வரிவசூல் மத்திய அரசின் முக்கிய வருவாய்களில் ஒன்றாக திகழ்வதோடு, நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்று கிறது.

கடந்த 2022-23-ம் நிதியாண்டில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரூ.1.08 லட்சம் கோடி அளவுக்கு வரி வசூல் ஆகி உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகம். அத்துடன், நாடு முழுவதும் அதிகளவு வரி வசூல் செய்வதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி 4-ம் இடத்தில் உள்ளன. இவ்வாறு சுனில் மாத்தூர் கூறினார்.

விழாவில் வருமானவரி ஆணையர்கள் ஜெயந்தி கிருஷ்ணன், டி.என்.கார், கிருஷ்ணா முராரி மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x