Published : 22 Jul 2023 04:38 AM
Last Updated : 22 Jul 2023 04:38 AM

தருமபுரி | உயிரிழந்த யானைகளின் 2 ஜோடி கோரைப்பற்களை தீயிட்டு எரித்து அழித்த வனத்துறை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் இயற்கையான முறையில் உயிரிழந்த யானைகளின் கோரைப்பற்கள் வனத்துறையால் தீயிட்டு அழிக்கப்பட்டன.

தருமபுரி வனக் கோட்டம் பென்னாகரம் வனச்சரகத்தில் ஒன்றும், ஒகேனக்கல் வனச்சரகத்தில் ஒன்றும் என 2 யானைகள் கடந்த காலங்களில் இயற்கையான முறையில் உயிரிழந்தன. இதில், பென்னாகரம் வனச் சரகத்தில் உயிரிழந்த யானையின் 30 செ.மீ நீளமும், 10 செ.மீ சுற்றளவும் கொண்ட ஒரு ஜோடி கோரைப் பற்களும், ஒகேனக்கல் வனச் சரகத்தில் உயிரிழந்த யானையின் 20 மற்றும் 13 செ.மீ நீளமும், 8 செ.மீ சுற்றளவும் கொண்ட ஒரு ஜோடி கோரைப் பற்களும் என 4 கோரைப் பற்கள் விசாரணை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் கப்பாளரின் உத்தரவின் பேரில் தருமபுரி மண்டல வனப் பாதுகாவலர் வழிகாட்டுதல்படி தருமபுரி மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு தலைமையில் நேற்று (ஜூலை 21) தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனச் சரக அலுவலக வளாகத்தில் இந்த 4 கோரைப் பற்களும் வனச் சரக அலுவலர்கள், அரசு சாரா நிறுவன அலுவலர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டன. விசாரணை தேவைகள் முடிந்ததால் உயிரிழந்த யானைகளின் 2 ஜோடி கோரைப்பற்களை தீயிட்டு எரித்து அழித்தது வனத்துறை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x