Published : 19 Jul 2023 05:44 PM
Last Updated : 19 Jul 2023 05:44 PM

டாஸ்மாக் கொள்முதல் குறித்த ஆர்டிஐ கேள்விகளுக்கு எப்படி விலக்கு கோர முடியும்? - உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: “டாஸ்மாக் நிறுவனத்துக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களைத் தெரிவிக்க தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எப்படி விலக்கு கோர முடியும்?” என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர், டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு, ஊழியர்களுக்கான சம்பளத் தொகை விவரங்கள், கடை வாடகை உள்ளிட்ட செலவுகள் விவரங்கள், மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு மதுபானங்கள், என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன என்பது உள்ளிட்ட விரங்களைக் கேட்டு, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த 2015ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார்.

மதுபான விற்பனை மூலம் கிடைத்த வருமானம், ஊழியர் சம்பளம் உள்ளிட்ட செலவுகள் குறித்த விவரங்களை வழங்கிய டாஸ்மாக் நிர்வாகம், மூன்றாம் நபரின் வர்த்தகம் சம்பந்தப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறி, எந்தெந்த நிறுவனங்களிடம், எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை வழங்க மறுத்து விட்டது.

இதை எதிர்த்து லோகநாதன், கடந்த 2017-ம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, என்ன விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன? என்ற விவரங்களை தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, டாஸ்மாக் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், "மூன்றாவது தரப்பின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் தகவல் உரிமைச் சட்டப்பிரிவின்படி இந்த தகவல்களை வழங்க முடியாது. இந்த தகவல்கள், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விலக்கு பெற்றவை" என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மட்டுமே மதுபான விற்பனையில் ஈடுபடுகிறது. மதுபானம் கொள்முதல் செய்ய எந்த டெண்டரும் கோரப்படுவதில்லை. நேரடியாக உற்பத்தி நிறுவனங்களில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்தச் சூழலில் எப்படி வர்த்தகம் பாதிக்கப்படுகிறது?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், “எந்த அடிப்படையில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தகவல்கள் விலக்கு பெற்றவை?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x