Published : 19 Jul 2023 01:57 PM
Last Updated : 19 Jul 2023 01:57 PM

அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு: அமலாக்கத் துறை மனு மீதான விசாரணை ஆக.2-க்கு ஒத்திவைப்பு

அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத் துறை தொடர்ந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், "அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை 80% நிறைவடைந்துள்ளதால் அமலாக்கத் துறையை சேர்த்துக்கொள்ள முடியாது" என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, வழக்கை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

வழக்கின் பின்னணி என்ன? - கடந்த 2001-2006-ம் ஆண்டில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக 2020-ம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது. வருமானத்துக்கு அதிகமாக அனிதா ராதாகிருஷ்ணன் 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384 ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்து, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை முடக்கியது.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்து இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x