Published : 19 Jul 2023 05:23 AM
Last Updated : 19 Jul 2023 05:23 AM

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேல்முறையீடு - உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவரது மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், தனது கணவரை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாகவும், எனவே, அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி செந்தில் பாலாஜியின் மனைவி எஸ்.மேகலா, சென்னைஉயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதம் என்பதால் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நீதிபதி நிஷாபானுவும், அவரை கைது செய்தது செல்லும் என்று நீதிபதி பரத சக்ரவர்த்தியும் தீர்ப்பளித்து இருந்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், ‘‘அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்திய சட்டத்துக்கு உட்பட்டவர்தான். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததிலும், அமர்வு நீதிமன்றம் அவரை நீதிமன்ற காவலில்அடைக்க ரிமாண்ட் செய்து உத்தரவு பிறப்பித்ததிலும் சட்ட ரீதியாக எந்த நடைமுறை விதிமீறலும்இல்லை. அவர் பரிபூரணமாக குணமடைந்த பிறகு அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்கலாம்’’ என்று கறி, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்து ஜூலை 14-ம் தேதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பு காரணமாக, இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு தனியார் மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் இருந்த செந்தில் பாலாஜி, நேற்று முன்தினம் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜியின் மனைவி எஸ்.மேகலா, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அமலாக்கத் துறை கேவியட் மனு: இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மனைவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், அப்போது தங்களது தரப்பு வாதத்தையும் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரி அமலாக்கத்துறை முன்கூட்டியே கேவியட் மனு தாக்கல் செய்துள் ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x