Published : 18 Jul 2023 03:03 PM
Last Updated : 18 Jul 2023 03:03 PM

‘ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளின் அரசியல் விளையாட்டு...’ - இபிஎஸ் மீது நடவடிக்கை கோரிய ஆர்.எஸ்.பாரதி வழக்கு தள்ளுபடி

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எட்பபாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், ‘ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் போதும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் அரசியல் விளையாட்டுகளுக்காக, நீதிமன்றங்கள் விளையாட்டு மைதானங்களாக பயன்படுத்தப்படுகிறது’ என்று உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். அந்த புகாரில், "தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை ஒதுக்கியதன் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதல்வர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்துள்ளார். அதனடிப்படையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13ன் கீழ் தண்டிக்க வேண்டும்" என புகாரில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு மீது தமிழக லஞ்ச ஒழிப்புதுறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து தனது புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்து முதல்வராக இருந்த பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி 2018-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் விசாரணையின் அறிக்கை சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்து. இந்தப் புகாரில் முகாந்திரம் இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று வாய்மொழி தகவலாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து, தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், "எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதா என்பதை கண்டறிய லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் 2018-ல் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளார். 12 சாட்சிகள், 112 ஆவணங்கள் குறித்து கூடுதல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தியுள்ளார். புகாரில் போதுமான ஆதாரங்கள் இல்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வேண்டியவர்களுக்கு சாதகமாக எடப்பாடி பழனிசாமி டெண்டர் வழங்கினார் என்பதற்கும், சுய லாபம் அடைந்ததற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று அறிக்கை அளித்துள்ளார். அந்த அறிக்கையை இயக்குனரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து புதிதாக ஆரம்பக்கட்ட விசாரணை நடத்த அனுமதி அளித்தது ஏன் என்பதற்கு எந்தவித காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை. இடைப்பட்ட காலத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தவிர, வேறு எந்தவித மாற்றமும் நிகழாத நிலையில், இந்த வழக்கில் மீண்டும் புதிதாக ஆரம்பக்கட்ட விசாரணை நடத்த உத்தரவிட முடியாது. மேலும், அரசு என்பது சட்டப்படி ஒன்று தான், எந்தக் கட்சி அதிகாரத்துக்கு வருகிறது என்பது முக்கியமல்ல. அரசு எடுத்த முடிவை எந்த காரணங்களும் இல்லாமல் மாற்றவும் முடியாது. தனி நபரின் அல்லது அரசியல் கட்சியின் அரசியல் செயல் திட்டம் சட்டத்தின் ஆட்சியை வீழ்த்தி விடக்கூடாது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 73 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படும் இயல்பை இழந்து விட்டனர். ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள் பிறப்பிக்கும் உத்தரவுப்படிதான் அவர்கள் செயல்படுகிறார்கள். ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் போதும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் அரசியல் விளையாட்டுகளுக்காக, நீதிமன்றங்கள் விளையாட்டு மைதானங்களாக பயன்படுத்தப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுகள் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் விவாத பொருளாக மட்டுமே நீடிக்கிறது. சாதாரண ஏழை வழக்காடிகளுக்கான நீதிமன்றத்தின் நேரம் என்பது இதுபோன்ற வழக்குகளால் விழுங்கப்படுகிறது.

எனவே, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையால் 2018-ல் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் குறைகான முடியாது. புதிய விசாரணைக்கு நடத்துவதற்கு எந்த காரணமுமில்லை. ஆட்சி மாற்றம் காரணமாக மட்டுமே உத்தரவிடப்பட்டு உள்ளது” எனக் கூறி, ஆர்.எஸ்.பாரதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இருப்பினும், மனுதாரர் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x