Last Updated : 15 Jul, 2023 02:37 PM

 

Published : 15 Jul 2023 02:37 PM
Last Updated : 15 Jul 2023 02:37 PM

துவாக்குடி - பஞ்சப்பூர் சுற்றுச்சாலையில் மேம்பாலம் - நீண்ட இழுபறிக்குப் பின் ரயில்வே அனுமதி!

திருச்சி - காரைக்குடி வழித்தடத்தில் மேம்பாலம் அமைக்க நிலைநிறுத்தப்பட்ட கான்கிரீட் கர்டர்கள்.

திருச்சி: துவாக்குடி- பஞ்சப்பூர் சுற்றுச்சாலையில் குமாரமங்கலம் ரயில் நிலையம் அருகில் மேம்பாலம் அமைக்க, நீண்ட இழுபறிக்குப் பின் ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அங்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபர் மாதத்துக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், திருச்சி-தஞ்சாவூர், திருச்சி-புதுக்கோட்டை, திருச்சி-மதுரை, திருச்சி-திண்டுக்கல், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் துவாக்குடியிலிருந்து மாத்தூர், பஞ்சப்பூர், சோழன் நகர் வழியாக ஜீயபுரம் வரை அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, துவாக்குடி- பஞ்சப்பூர், பஞ்சப்பூர்-ஜீயபுரம் என இரு கட்டங்களாக இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிலம் கையகப்படுத்துவதில் இருந்த இடர்பாடுகள் காரணமாக பஞ்சப்பூர்- ஜீயபுரம் இடையிலான 18.43 கி.மீ சாலைப் பணி கிடப்பில் உள்ளது. இதேவேளையில், துவாக்குடி- பஞ்சப்பூர் இடையிலான 25.91 கி.மீ சாலைப் பணிகள் கடந்தாண்டே 95 சதவீதம் நிறைவடைந்து விட்டன.

ஆனால், காரைக்குடி- திருச்சி ரயில் வழித்தடத்தில் குமாரமங்கலம் ரயில் நிலையம் அருகில் மேம்பாலம் அமைக்க தெற்கு ரயில்வே அனுமதி தராததால், இந்தச் சாலைப் பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, காலதாமதத்துக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு அபராதத் தொகையைச் செலுத்திய ஒப்பந்த நிறுவனம், நிகழாண்டில் மட்டும் 3 முறைக்கு மேல் மேம்பாலம் அமைக்க அனுமதி கேட்டு ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது.

ஆனால், ரயில் போக்குவரத்து, மின் பாதை ஆகியவற்றுக்கு போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என கூறி மேம்பாலம் கட்ட அனுமதி தர ரயில்வே நிர்வாகம் மறுத்துவிட்டது. அதன்பிறகு, ரயில்வே அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, குமாரமங்கலம் ரயில் நிலையம் அருகில் மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள், கர்டர்களை நிலைநிறுத்தும் தூண்கள்- மின் பாதை இடையேயான இடைவெளி ஆகியவை சரி செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு, மேம்பாலம் கட்ட கடந்த மாத இறுதியில் அனுமதி கிடைத்தது.

இதையடுத்து, கடந்த 3 நாட்களாக கான்கிரீட் கர்டர்களை ரயில் பாதையில் நிலைநிறுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்து, அக்டோபர் மாதத்தில் இந்தச் சாலை பயன்பாட்டுக்கு வரும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியது: துவாக்குடி- பஞ்சப்பூர் சுற்றுச்சாலையில் காரைக்குடி- திருச்சி ரயில் வழித்தடத்தில் குமாரமங்கலம் ரயில் நிலையம் அருகில் மேம்பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக ராட்சத கிரேன்கள் மூலம் கான்கிரீட் கர்டர்களை தூண்களில் நிலை

நிறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்பிறகு மேம்பாலத்தின் குறுக்கே இரும்பு துண்கள் அமைத்தல், சோதனை அடிப்படையில் போக்குவரத்து இயக்கம் உள்ளிட்டவற்றுக்கு ரயில்வே நிர்வாகத்தின் அனுமதி கிடைத்த பிறகு, பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும்.
செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு அக்டோபர் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x