Published : 15 Jul 2023 04:27 PM
Last Updated : 15 Jul 2023 04:27 PM

மகளிர் உரிமைத் தொகை | “வதந்திகளை நம்பாதீர்... குழப்பம் வேண்டாம்...” - சென்னை மாநகராட்சி ஆணையர்

மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக தேவையற்ற குழப்பங்களையும், வதந்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், தகுதியான அனைவருக்கும் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம்கள் ஜூலை 24 முதல் சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதற்கான பயோ மெட்ரிக் கருவிகள் உள்ளிட்ட தேவையான பொருட்கள் இன்று முதல் அனைத்து மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது தொடர்பான பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் ரிப்பன் மாளிகையில் ஆய்வு செய்தார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், "சென்னையில் 1417 நியாய விலை கடைகளும் 17.18 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களும் உள்ளனர். தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக 10 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளது. மீதம் உள்ள 7 லட்சம் விண்ணப்பங்கள் விரைவில் வந்துவிடும். அதன் பின்னர் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் தேதி அறிவிக்கப்படும்.

500 கார்டுகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமித்து, 3 கடைகளுக்கு ஒரு முகாம் என திட்டமிட்டுள்ளோம். பொதுமக்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட முகாம் எங்கு உள்ளது என்பதை அறிந்து செல்ல வேண்டும். டோக்கன் வழங்கப்பட்ட தேதியில் முகாமுக்குச் சென்றால் போதும்.

வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு புதிதாக வங்கி கணக்கு திறந்து தர முகாமிலே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மண்டல அளவில் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட உள்ளது. மக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இந்த அறைக்கு தொடர்பு கொள்ளலாம்.

மக்கள் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். இந்தத் திட்டத்தை பொறுத்தவரை முழுவீச்சில் அனைத்து அலுவலர்களும் பணியாற்றி வருகிறார்கள். தேவையற்ற குழப்பங்கள் வேண்டாம். தகுதியான அனைவருக்கும் விண்ணப்பம் வழங்கப்படும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x