Published : 15 Jul 2023 12:47 PM
Last Updated : 15 Jul 2023 12:47 PM

 'வீட்டிற்கோர் புத்தகச்சாலை' என்பது மெய்ப்பட உழைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காமராஜர் பிறந்தநாளில், 'வீட்டிற்கோர் புத்தகச்சாலை' என்று அண்ணா சொன்னது மெய்ப்பட உழைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாளான இன்று, நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பங்கேற்று, அவரது புகழைப் போற்றினேன்.

அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக 2017-இல் பொறுப்பேற்றது முதல், என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகளையும் பொன்னாடைகளையும் தவிர்த்து, புத்தகங்களை அளித்திடச் சொல்லியிருந்தேன். அதன்படி என்னை வந்தடைந்த புத்தகங்களில் ஒன்றரை இலட்சம் புத்தகங்களை தமிழகத்தின் பல்வேறு நூலகங்களுக்கும், என்னிடம் புத்தகங்கள் வேண்டி கடிதம் எழுதியவர்களுக்கும் அளித்துள்ளேன்.

அதன் தொடர்ச்சியாக, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில், கருணாநிதி அறிவித்த கல்வி வளர்ச்சி நாளில் 7740 புத்தகங்களைப் பொது நூலகத்துறைக்கு வழங்கினேன். பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் - கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு நாள் என இந்நாளில், 'வீட்டிற்கோர் புத்தகச்சாலை' என்று பேரறிஞர் அண்ணா சொன்னது மெய்ப்பட உழைப்போம்!" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x