Published : 13 Jul 2023 06:34 PM
Last Updated : 13 Jul 2023 06:34 PM

மேயருக்கு ரூ.30,000, துணை மேயருக்கு ரூ.15,000, உறுப்பினர்களுக்கு ரூ.10,000 மதிப்பூதியம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மாநகராட்சி மேயர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 30,000, துணை மேயர்களுக்கு ரூபாய் 15,000 மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் 10,000 மதிப்பூதியம் வழங்கப்படும். இதேபோன்று, நகராட்சி மன்றத் தலைவர்களுக்கு ரூபாய் 15,000, துணைத் தலைவர்களுக்கு ரூபாய் 10,000 மற்றும் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் 5,000 மதிப்பூதியம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள், தாங்கள் முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால், தங்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என 13.04.2022 அன்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

தமிழக முதல்வர், இக்கோரிக்கையினை பரிசீலித்து, மாநகராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்களின் மக்கள் நலப் பணிகளை சிறப்பிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்குவதற்கு ஆணையிட்டுள்ளார்.

இதன்படி, மாநகராட்சி மேயர்களுக்கு, மாதந்தோறும், ரூபாய் 30,000, துணை மேயர்களுக்கு ரூபாய் 15,000 மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் 10,000 மதிப்பூதியம் வழங்கப்படும். இதே போன்று, நகராட்சி மன்றத் தலைவர்களுக்கு ரூபாய் 15,000, துணைத் தலைவர்களுக்கு ரூபாய் 10,000 மற்றும் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் 5,000 மதிப்பூதியம் வழங்கப்படும்.

மேலும், பேரூராட்சித் தலைவர்களுக்கு ரூபாய் 10,000, பேரூராட்சி துணைத் தலைவர்களுக்கு ரூபாய் 5,000 மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் 2,500 மதிப்பூதியம் வழங்கப்படும். இந்த மதிப்பூதியம், இம்மாதம், அதாவது, 2023ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வழங்கப்படும்.

இந்நடவடிக்கை, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகத் திறனை வலுப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x