Published : 12 Jul 2023 03:35 PM
Last Updated : 12 Jul 2023 03:35 PM

டெட்ரா பாக்கெட் மது விற்பனையால் குழந்தைகளுக்கு பாதிப்பு: ஜெயக்குமார் கருத்து

ஜெயக்குமார் | கோப்புப்படம்

சென்னை: “டெட்ரா பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் மதுவை வீடுகளில் வாங்கி வைக்கும்போது, தவறுதலாக அதை குழந்தைகள் எடுத்து பயன்படுத்தும் நிலை ஏற்படும். இது குழந்தைகளைப் பாதிக்கும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "500 கடைகளை மூடுவதாக சொல்லிவிட்டு, 300 கடைகளை இப்போது திறந்துள்ளனர். இப்போது காலையிலேயே மது அருந்து என்கிறது அரசு. வேலைக்குச் செல்பவர்கள் காலையில் மது அருந்தினால் விளங்குமா தமிழ்நாடு? ஒரு கட்டிடத் தொழிலாளி, காலையிலேயே மது குடித்துவிட்டு வேலைக்குச் சென்றால், எப்படி அத்தனை பெரிய கட்டிடத்தில் வேலை செய்ய முடியும். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்றைக்கும் 10 ரூபாய் கூடுதலாக் வசூலிக்கப்படுகிறது.

அமைச்சர் முத்துசாமி அண்ணே, அதிமுகவில் இருந்தபோது நன்றாக இருந்தார். திமுகவுக்குச் சென்றபின்னர் எப்படியெல்லாம் மாறிவிட்டார் என்று பாருங்கள். நல்லவரான அவரை போய் டாஸ்மாக் சரக்கு விற்க அனுப்பியுள்ளனர். அரசியலில் எவ்வளவு சீனியரீட்டி உள்ளவர் அவர். அவர் சென்று ஒரு ஆய்வு செய்திருக்கிறார். அவர் டெட்ரா பாக்கெட் என்ற ஒரு புதிய வழிமுறையைக் கொண்டுவருகிறார்.

டெட்ரா பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்தால், அதை பாரிலேயே வாங்கி ஊற்றி குடித்துவிட்டால் பிரச்சினை இல்லை. சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது, மறுசுழற்சியும் செய்துவிடலாம். ஒருவேளை இரவு அல்லது காலையில் குடிப்பதற்காக வாங்கிச் சென்று வீட்டில் வைக்கும்போது, அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் என்னவென்று அதை நினைக்கும்? ஏதோ தந்தை ஜூஸ் வாங்கி வைத்துள்ளார் என்றுதானே குழந்தைகள் நினைக்கும். அதை எடுத்து பயன்படுத்தும் நிலை வருமா? வராதா? எனவே, இது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான முறையாகும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x