Last Updated : 10 Jul, 2023 04:15 PM

 

Published : 10 Jul 2023 04:15 PM
Last Updated : 10 Jul 2023 04:15 PM

புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு ரூ.300, மஞ்சள் நிற கார்டுகளுக்கு ரூ.150 சிலிண்டர் மானியம்

புதுச்சேரி: சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு சிலிண்டர் மானியமாக ரூ.300-ம், மஞ்சள் நிற ரேஷன் கார்டுக்கு ரூ.150-ம் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்தது. பட்ஜெட்டில் அரசின் எந்த நிதியுதவியும் பெறாத ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000-ம், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.300 சிலிண்டர் மானியம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். இதில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை 13 ஆயிரம் பேருக்கு வழங்கி திட்டம் தொடங்கப்பட்டது.

தற்போது புதிய பயனாளிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. சுமார் 75 ஆயிரம் பயனாளிகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்தும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிலிண்டர் மானியத்துக்கு அரசாணை வெளியாகியுள்ளது. இதில் சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு சிலிண்டர் மானியமாக ரூ.300-ம், மஞ்சள் நிற ரேஷன் கார்டுக்கு ரூ.150 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் ஒரு சிலிண்டர் வீதம் ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு இந்தத் தொகை வழங்கப்பட உள்ளது. பட்ஜெட்டில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.300 சிலிண்டர் மானியம் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், மஞ்சள் கார்டுகளுக்கு தொகை பாதியாக ரூ.150 என குறைக்கப்பட்டுள்ளது. இந்த மானிய தொகை கவுரவ ரேஷன் கார்டுதாரர்களுக்கு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் விரைவில் மானிய திட்டம் தொடங்கப்படவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x