Published : 06 Jul 2023 04:53 PM
Last Updated : 06 Jul 2023 04:53 PM

மதுரை சம்பவத்துக்கு சென்னையில் வழக்கு தொடர்ந்தது ஏன்? - டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் கேள்வி

சென்னை: “மதுரையில் சம்பவம் நடந்துள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது?” என்று ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்தார். அந்தக் காலக்கட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாகவும், இவை அவரது மனைவி நடத்தும் டிராவல் ஏஜென்சி மூலம் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இதுகுறித்த விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க க்யூ பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த விசாரணையை கண்காணிக்க எஸ்பிசிஐடி, ஐஜி-க்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வாராகி என்பவர் தமிழக அரசுக்கு கடந்த மே மாதம் மனு அனுப்பியிருந்தார். இந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், "ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் மீதான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இந்த விசாரணையில் முகாந்திரம் இருந்தால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, "இதே விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு நற்சான்று வழங்கியுள்ளது" என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "சம்பவம் மதுரையில் நடந்துள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது? மேலும் மதுரைக் கிளை ஐபிஎஸ் அதிகாரிக்கு நற்சான்று அளித்துள்ளதே?” என்று மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விஜேந்திரன், மதுரை வரம்புக்கு உட்பட்ட வழக்குகளை சென்னையிலும் தாக்கல் செய்ய அனுமதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டினார். இதையடுத்து, அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x