Published : 03 Jul 2023 04:03 PM
Last Updated : 03 Jul 2023 04:03 PM

மேகேதாட்டு அணை விவகாரம்: மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு தினகரன் வலியுறுத்தல்

சென்னை: மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேகேதாட்டு அணை கட்டுவதால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமமாகும். மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பான கர்நாடகா அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கும் வகையில் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக முதல்வரை வலியுறுத்துகின்றேன்.

மேலும், தமிழகத்துக்குத் தர வேண்டிய உரிமையை தராததோடு, மழைவெள்ள காலத்தில் மட்டும் எஞ்சிய நீரை திறந்து விடும் கர்நாடகா அரசு, தமிழகத்தின் விவசாயம், குடிநீர் தேவைக்கு போதிய நீரை தராமல் அணைகட்ட நினைப்பது தமிழ்நாடு மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகமாகும்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வரும் சூழலில், குறுவை சாகுபடியை காப்பாற்ற முடியுமா என டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையில் உள்ள நிலையில், கர்நாடகா விடுவிக்க வேண்டிய தண்ணீரை காவிரி மேலாண்மை வாரியம் வாயிலாக பெறவும், கர்நாடகா அரசுக்கு எதிராக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்கவும் முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்'' என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x