Published : 30 Jun 2023 05:31 AM
Last Updated : 30 Jun 2023 05:31 AM

ஜூலை 3-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வரும் ஜூலை 3-ம் தேதி நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 30) ஓரிரு இடங்களிலும், வரும் 1, 2-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல, வரும் ஜூலை 3-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 29-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 3செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லாறு, தேனி மாவட்டம் பெரியாறு ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும்அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ.வேகத்திலும் சூறாவளிக் காற்றுவீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x