Published : 29 Jun 2023 05:48 PM
Last Updated : 29 Jun 2023 05:48 PM

ஆதி திராவிடர் நல வாரிய பணியாளருக்கு சம்பளம் வழங்காத சிறப்பு தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சேலம் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நல வாரியம் பணியாற்றிய சமையல் ஊழியர்களுக்கு 6 ஆண்டுகளாக சம்பளம் வழங்காத சிறப்பு தாசில்தாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நல வாரியத்தில் சமையல்காரராக மூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2017 டிசம்பர் 1ம் தேதி முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இதையடுத்து, தனது சம்பள பணத்தை வழங்குமாறு ஆதி திராவிடர் நலத் துறைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மூர்த்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மூர்த்திக்கு சம்பளம் வழங்குமாறு கடந்த 2020 செப்டம்பரில் உத்தரவிட்டது.

ஆனால், அந்த உத்தரவை சேலம் மாவட்ட ஆதி திராவிடல் நல வாரிய அதிகாரி அமல்படுத்தவில்லை. இதையடுத்து, மூர்த்தி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி மற்றும் சிறப்பு தாசில்தார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆதி திராவிடர் நல அதிகாரி தாக்கல் செய்த பதில் மனுவில், மூர்த்தி தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு மாவட்ட முன்னாள் ஆதி திராவிடர் நல வாரிய அதிகாரி வேலை வழங்கியுள்ளார். மூர்த்தி கலெக்டரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 2018 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில்ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையர் கடந்த 2020 செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவில் மூர்த்திக்கு சம்பள பாக்கி அனைத்தையும் வழங்குமாறு கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட ஆதி திராவிடர் நல சிறப்பு தாசில்தார் பாக்கி சம்பளத்தை மூர்த்திக்கு வழங்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதி திராவிடர் நல வாரிய அதிகாரி உத்தரவிட்டார்.

ஆனால், அந்த உத்தரவையும் சிறப்பு தாசில்தார் அமல்படுத்தவில்லை. அதே நேரத்தில் சம்பளப் பணத்தை வழங்கி விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் மூர்த்தி தொடர்ந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அவருக்கு சம்பள பாக்கியை தரவில்லை. இது தொடர்பான விசாரணையில் தொடர்ந்து வாய்தா கேட்கப்பட்டது.

வழக்கு மீண்டும் 2022 ஆகஸ்டில் விசாரணைக்கு வந்தபோது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி 3 வாரங்களில் பணத்தை தருவதாக தெரிவித்ததையடுத்து வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகுமாறு தாசில்தாருக்கு சட்டபூர்வ நோட்டீஸ் வழங்கப்பட்டது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தான் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதாக சிறப்பு தாசில்தார் தெரிவித்தார். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஓர் ஆண்டு காலம் அவர் சேலம் சிறப்பு தாசில்தாராகவே அவர் பணியாற்றியுள்ளார்.

தொடர்ந்து நீதிமன்றத்திற்கு அவர் தவறான தகவல்களை தந்து நீதிமன்றத்தின் விசாரணையை மாற்ற முயன்றுள்ளார். பாதிக்கப்பட்டவருக்கு ஒரு ரூபாய் கூட வழங்க சிறப்பு தாசில்தார் முயற்சி செய்யவில்லை. எனவே, அவரது வாதத்தை நீதிமன்றம் ஏற்க முடியாது.

பாதிக்கப்பட்டவருக்கு சம்பளம் வழங்காமல் இருந்தால் அவரது வாழ்வாதாரம் என்னாவது? அவரது குழந்தைகளின் படிப்பு, குடும்ப நிலையை எப்படி சமாளிப்பார்? இது அரசியலமைப்பில் தரப்பட்டுள்ள வாழ்வாதார உரிமைக்கு எதிரானது. சிறப்பு தாசில்தார் நீதிமன்றத்தில் தனது தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதையும் ஏற்க முடியாது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறப்பு தாசில்தார் ஜாஹீர் உசேனுக்கு 2 ஆண்டுகள் சாதாரண சிறை தண்டனையும் ரூ 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். உடனடியாக அவர் உயர் நீதிமன்ற ஜுடீசியல் பதிவாளர் முன்பு ஆஜராகவேண்டும். அதன் மீது பதிவாளர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை தந்துள்ள சிறப்பு தாசில்தார் மீது உயர் நீதிமன்ற பதிவாளர் குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x