Last Updated : 29 Jun, 2023 03:25 AM

 

Published : 29 Jun 2023 03:25 AM
Last Updated : 29 Jun 2023 03:25 AM

பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் பெருமைதான் - பொன். ராதாகிருஷ்ணன் கருத்து

புதுச்சேரி: பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் பெருமைதான் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து பயனடைந்த பயனாளிகளை நேரடியாக சந்தித்து பேசும் மக்கள் இயக்க நிகழ்ச்சி நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி உலக நாடுகளே வியக்கும் வகையில் இந்தியாவை முன்னேற்றியுள்ளார்.

அதனால் உலகத் தலைவர்கள் அவரை வழிகாட்டியாக குறிப்பிடுகின்றனர். பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஏற்க வேண்டியது அவசியம். புதுச்சேரி முதல்வருக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள்மீது முதல்வரே முறைப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதற்காக அனைத்து அதிகாரிகளையும் குறை கூறுவது சரியல்ல.

தமிழகத்தில் ராமநாதபுரம் மட்டுமல்ல, நாட்டின் 543 மக்களவைத் தொகுதிகளில் எங்கு போட்டியிட்டாலும் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெறுவார். தமிழகத்தில் அவர் போட்டியிட்டால் நமக்கு பெருமைதான். பிரதமர் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை கட்சி தான் முடிவுவெடுக்கும். அவரால் கூட முடிவெடுக்க முடியாது. சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் பேசித்தான் தீர்வுகாண முடியும்.

குடும்பக் கோயில்களை இந்து சமய அறநிலையத் துறைக்கு வழங்க முடியாத நிலையே சிதம்பரத்துக்கும் பொருந்தும். தமிழக ஆளுநர் திமுக உறுப்பினரோ, அக்கட்சி சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டவரோ இல்லை. அவர் தமிழக எம்எல்ஏவும் இல்லை. ஆகவே அவருக்கு கருப்புக் கொடி காட்டுவது சரியல்ல" என்றார். பேட்டியின்போது புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x