Published : 28 Jun 2023 05:50 PM
Last Updated : 28 Jun 2023 05:50 PM

“சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் யார் பெரியவர் என்ற பிரச்சினையே இல்லை” - சேகர்பாபு

திருப்பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

சென்னை: பக்தர்கள் வழிபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலை தொன்மை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள ராஜகோபுரம், ஆயிரங்கால் மண்டபம், ரிஷி கோபுர மண்டபம், மாவடி சன்னதி, நடராஜர் சன்னதி, சிவகங்கை தீர்த்தக் குளம், திருமதில் பலப்படுத்தும் பணிகள் உள்ளிட்ட 29 திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "1,000 ஆண்டுகளுக்கு மேலான நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட திருக்கோயில்களை பொக்கிஷங்களாக பாதுகாத்திடும் வகையில் புனரமைத்தல், ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருக்குளங்களை பாதுகாத்தல், திருத்தேர்களை புனரமைத்தல், நந்தவனங்களை பாதுகாத்தல், திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தங்கும் அறை, முடி காணிக்கை மண்டபம், விருந்து மண்டபம் போன்றவற்றை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.

1,000 ஆண்டுகள் தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் முதல்வர், இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு அத்திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு 2022 -2023ம் ஆண்டில் ரூ.100 கோடியும், 2023 – 2024ம் ஆண்டிற்கு ரூ.100 கோடி அரசு மானியமாக வழங்கி இருக்கின்றார். அந்த வகையில் 1,000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் அரசு மானியம் ரூ.17 கோடி மற்றும் திருக்கோயில் நிதி ரூ.2 கோடி ஆகமொத்தம் ரூ.19 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ள இன்றைய தினம் பாலாலயம் நடைபெற்றது.

காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் திருப்பணிகள் 2024-ஆம் ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெற வேண்டும் என்று துறை அலுவலர்களை கேட்டுக் கொண்டிருக்கின்றோம். கடைசியாக இத்திருக்கோயிலுக்கு 2006 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று இருக்கின்றது. சுமார் 17 ஆண்டுகள் கடந்துவிட்டதால் திருப்பணிகளை வேகப்படுத்தி குடமுழுக்கு நடத்தப்படும்" என்று அவர் கூறினார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பான கேள்விக்கு, "சிதம்பரம் நடராஜர் கோயிலை பொறுத்தளவில் சட்டப்படி பக்தர்களின் சுதந்திரமான இறைவழிபாட்டிற்கு அனைத்து உதவிகளையும் இந்து சமய அறநிலைத்துறையும், தமிழக அரசும் செய்யும். இதில் யார் பெரியவர் என்ற பிரச்சினையே இல்லை. இறையன்பர்கள் தெய்வத்தை வழிபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கமாகும்" என்றார். | வாசிக்க > கனக சபையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 4 நாட்களாக நடந்தது என்ன?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x