Published : 27 Jun 2023 06:04 PM
Last Updated : 27 Jun 2023 06:04 PM

பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.68 - தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

இடம்: கோவை | படம்: எம்.பெரியசாமி

சென்னை: "பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலையேற்றத்தை கருத்தில் கொண்டு தக்காளியை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வரோ் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலையேற்றத்தை கருத்தில் கொண்டு தக்காளியை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கனிசமாக குறைந்ததாலும், கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்துள்ளது. தோராயமாக நாள் ஒன்றுக்கு சென்னை, கோயம்போடு மார்க்கெட்டுக்கு 800 டன் வரையில் வரக்கூடிய தக்காளி வரத்து தற்போது 300 டன் என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால் வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கூட்டுறவுத்துறையின் மூலம் சென்னையில் செயல்பட்டு வரும் 27 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் 13 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், திருச்சியில் செயல்பட்டு வரும் 13 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 1 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடை, மதுரையில் செயல்பட்டு வரும் 4 பண்ணை பசுமை கர்வோர் கடைகள்.

மேலும், தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 வீதம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் என 62 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்தபட்சமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.68 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையானது வெளிச்சந்தையுடன் ஒப்பிடுகையில் ரூ.28 முதல் ரூ.32 வரை குறைவானதாகும்.

மேலும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.60 முதல் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விலையேற்றம் தற்காலிகமானதே விரைவில் தக்காளி விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி மற்றும் காய்கறிகளை வாங்கிப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார். | வாசிக்க > நாடு முழுவதும் தக்காளி கிலோ ரூ.80 - ரூ.100-க்கு விற்பனை: விலை மேலும் உயரும் அபாயம் ஏன்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x