Published : 24 Jun 2023 07:29 PM
Last Updated : 24 Jun 2023 07:29 PM

உதய் மின் திட்டத்தால் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய கடன் சுமை 52% அதிகரிப்பு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

கே.எஸ்.அழகிரி | கோப்புப்படம்

சென்னை: "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கடன் செப்டம்பர் 2015-ல் ரூ.81,312 கோடியாக இருந்தது, மார்ச் 2020-ல் ரூ.1.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன்படி கடன் சுமை 52 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் உதய் மின் திட்டத்தில் சேர்ந்ததனால் கடன் சுமை குறைவதற்கு மாறாக அதிகரித்துள்ளது" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரவு நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு 20 சதவீதம் கூடுதலாக மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு திடீர் அறிவிப்பு மூலம் நெருக்கடி கொடுத்திருக்கிறது. தமிழகத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான 5 மணி நேரத்தை அதிக மின் பயன்பாடு நேரமாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், மின் தேவை அதிகம் உள்ள இத்தகைய நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு 20 சதவீதம் மின் கட்டணத்தை கூடுதலாக வசூலிக்க வேண்டுமென மத்திய மின்துறை அமைச்சகம் திடீரென அறிவித்துள்ளது.

இந்த மின்சார பயன்பாட்டுக்கு மத்திய அரசின் கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கடும் சுமையை ஏற்படுத்தும். இது பொதுமக்கள் மீது திணிக்கப்பட்ட கடும் தாக்குதலாகவே கருத வேண்டும். இத்தகைய கட்டண உயர்வை பொதுமக்களோ, தொழில்துறையினரோ எதிர்கொள்ள முடியாத வகையில் கடும் சிரமத்துக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது, ஜனவரி 2017 இல் பாஜக அரசின் நெருக்கடியால் உதய் மின் திட்டத்தில் அன்றைய மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தமிழகத்தை 21-வது மாநிலமாக இணைத்ததனால் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இத்தகைய இணைப்பின் மூலம் ரூபாய் 11,000 கோடி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சேமிப்பு ஏற்படும் என்று அன்றைய அதிமுக மின்துறை அமைச்சர் கூறியதையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் 92 சதவிகித கடன்கள் உதய் திட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறியதையும் எவரும் மறந்திட இயலாது.

அன்றைய மின்துறை அமைச்சர் கூறியதற்கு மாறாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கடன் செப்டம்பர் 2015ல் ரூபாய் 81,312 கோடியாக இருந்தது, மார்ச் 2020-ல் ரூபாய் 1.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன்படி கடன் சுமை 52 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் உதய் மின் திட்டத்தில் சேர்ந்ததனால் கடன் சுமை குறைவதற்கு மாறாக அதிகரித்துள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.

எனவே, மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். மத்திய பாஜக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிற நிலையில் தற்போது மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த மின் கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x