Published : 22 Jun 2023 05:26 AM
Last Updated : 22 Jun 2023 05:26 AM

தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட உத்தரவு - அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

சென்னை: தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படுவதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தில் மொத்தமுள்ள 5,329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதுதாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.

முழு மதுவிலக்கு: தமிழகத்தில் படிப்படியாக முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதை நோக்கிய பயணத்தின் தொடக்கமாக இது அமைய வேண்டும். மூடப்படும் மதுக்கடைகள் தவிர, மீதமுள்ள 4,829 மதுக்கடைகளும் படிப்படியாக மூடப்பட்டு, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கை தொடர்ந்தால், அடுத்த இரண்டரை ஆண்டுகளில் முழுமையான மதுவிலக்கு சாத்தியமாகி விடும். அதற்கேற்றவாறு, உடனடியாக கால அட்டவணையை தயாரித்து வெளியிடுவதுடன், அதனடிப்படையில் மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தபடி நாளை (இன்று)முதல் 500 மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் குட்கா உள்ளிட்டு போதைப் பொருள் விற்பனையை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இந்நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: தமிழகத்தில் முதல்கட்டமாக 500 மதுக்கடைகளைக் கண்டறிந்து, அவற்றை மூட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறோம். இதற்கு வழிவகுத்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது மூடப்பட்டுள்ள 500 மதுக்கடைகள் மட்டுமின்றி, தமிழகம் மதுவில்லா மாநிலமாகத் திகழ முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கடைகள் மூடப்படும் பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப் பட்டால், அதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி: தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க பூரண மதுவிலக்கு அவசியம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது இன்றைய முதல்வரிடம் நாங்கள் கொடுத்த 5 அம்சக் கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

ஆரோக்கியமான சமூக அமைப்பை் கட்டமைக்கும் வகையில், பூரண மதுவிலக்கை நோக்கிய ஆரம்ப முயற்சி என்ற அளவில் இதை வரவேற்கிறோம். உடல் நலச் சீர்கேடு, சாலை விபத்துகள், குடும்பச் சீரழிவுகள், தனிநபர் பொருளாதார வீழ்ச்சி என பலவற்றுக்கும் மூல காரணமாக மதுபான கடைகளே விளங்குகின்றன. இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு, பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x