Published : 17 Jun 2023 09:08 PM
Last Updated : 17 Jun 2023 09:08 PM

தி.மலை | பிரசவத்தில் தாயும், சேயும் உயிரிழப்பு: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முற்றுகை

திருவண்ணாமலை: பிரசவத்தில் தாயும், சேயும் உயிரிழந்ததால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அடுத்த சாவல்பூண்டி கிராமத்தில் வசிப்பவர் மாதவன் மனைவி ராஜலட்சுமி (32). நிறை மாத கர்ப்பிணியான இவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (ஜூன் 16) அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தை உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், ராஜலட்சுமியின் உடல்நிலையும் மோசமடைந்துள்ளது. பிரசவத்தின்போது ரத்த போக்கு அதிகம் இருந்ததால், அவருக்கு ரத்தம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், உறவினர்கள் உதவியுடன் ராஜலட்சுமிக்கு ரத்தம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி ராஜலட்சுமியும் இன்று மாலை உயிரிழந்தார்..

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தாயும், சேயும் உயிரிழந்துவிட்டதாகவும், தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதையறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பிரேத பரிசோதனை அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர். அவர்களது அறிவிப்பை ஏற்க மறுத்த, உறவினர்கள் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை என்பது மருத்துவருக்கு சாதகமாக இருக்கும் எனவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடரும் உயிரிழப்புகள்: இதேபோல், திருவண்ணாமலை அடுத்த கோணலூர் கிராமத்தில் வசித்த அருணாசலம் மனைவி சங்கீதா, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மே மாதம் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது தாயும் சேயும் உயிரிழந்தனர். அப்போதும், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்துவிட்டதாக கூறி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்கள், பிறக்கும் சிசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x