Published : 16 Jun 2023 04:10 AM
Last Updated : 16 Jun 2023 04:10 AM

தனிநபர் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற அனுமதி

சென்னை: அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 14-ம் தேதி கைது செய்தனர். அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த கைது நடவடிக்கையில் குளறுபடி இருப்பதால், அவரை மீட்டு
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, அவரது மனைவி மேகலா சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரத சக்ரவர்த்தி அமர்வில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் ஏ.சரவணன் ஆகியோரும், அமலாக்கத் துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன் மற்றும் அமலாக்கத் துறையின் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.

அதன் விவரம்: செந்தில் பாலாஜி தரப்பு: கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய எந்த நடைமுறைகளையும் அமலாக்கத் துறையினர் கடைபிடிக்கவில்லை. நாங்கள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த பிறகே, அவர் ரிமாண்ட் செய்யப்பட்டார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் இருப்பதால் ஆட்கொணர்வு மனு செல்லாததாகி விடும் என்று கூற
முடியாது. ஏனென்றால், ரிமாண்ட் சட்டவிரோதமாக இருந்தாலோ, இயந்திரத்தனமாக செய்யப்பட்டாலோ, கைதுக்கான காரணங்கள் முறையாக கூறப்படாவிட்டாலோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

அவருக்கு அவசரமாக இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளிக்க வேண்டும்.

அமலாக்கத் துறை தரப்பு: ரிமாண்ட் செய்துவிட்ட பிறகு, இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து டெல்லி எய்ம்ஸ்
மருத்துவர்கள் குழு பரிசோதனை மேற்கொள்ள அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டம் சிறப்பு சட்டம் என்பதால், அதற்கு குற்றவியல் விசாரணை முறை சட்டம் பொருந்தாது. தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அதிநவீன வசதிகள் இருக்கும்
போது, தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அவசியம் இல்லை. அவரது உடல்நிலையை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது எங்கள் பொறுப்பு.

அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். நியாயமான அறிக்கை தேவை என்பதால் எய்ம்ஸ் குழு சோதனை செய்ய கோருகிறோம். இவ்வாறு வாதம் நடந்தது.

பின்னர், நீதிபதிகள் நேற்று மாலை பிறப்பித்த உத்தரவு: கைது நடைமுறை சரியா, தவறா. ரிமாண்ட் செய்தது சட்டவிரோதமா, இல்லையா என்ற கேள்விகளுக்கு விடை காணவேண்டி இருப்பதால், ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம். இதற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் வரும் 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். செந்தில் பாலாஜியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர் வழக்கமாக அங்குதான் சிகிச்சை பெறுவார் என்பதால், காவேரி மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை பெறஅனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இது உயிர் காக்கும் அறுவை சிகிச்சை என்பதால் கைதானவரின் விருப்பப்படி, காவேரி மருத்துவமனையில் தனது சொந்த செலவில் சிகிச்சை பெறலாம்.

தற்போதைய சூழலில் அரசு மருத்துவர்களின் அறிக்கையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவோ, சந்தேகப்படவோ முடியாது. இது தனிநபர் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், காவேரி மருத்துவமனையில் செந்தில்பாலாஜி சிகிச்சை பெற அனுமதிக்கிறோம். அமலாக்கத் துறையும் தனியாக மருத்துவர் குழு அமைத்து, அவரது
உடல்நிலையை ஆய்வு செய்து கொள்ளலாம். ‘15 நாள் என்ற ரிமாண்ட் காலத்தை நீட்டிக்க வேண்டும். அப்போதுதான் காவலில் எடுத்து விசாரிக்க முடியும்’ என அமலாக்கத் துறை கோரியுள்ளது. இதுபற்றி 22-ம் தேதி பரிசீலிக்கப்படும். இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x