Published : 15 Jun 2023 05:14 AM
Last Updated : 15 Jun 2023 05:14 AM

செந்தில்பாலாஜி கைது | அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை - அண்ணாமலை கருத்து

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏதுமில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வை தமிழக மாணவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தனியார் பள்ளியில் படித்து முதலிடம் பிடித்தவர்களை சிறுமைப்படுத்கக் கூடாது. நீட் வருவதற்கு முன் எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை நடந்ததாகக் கூறியிருந்ததால், அமலாக்கத் துறை நடவடிக்கையில் இறங்கியது. இவ்வளவு பின்புலம் இருக்கும்போது, இது எந்த விதத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.

இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதே ஆண்டு தலைமைச் செயலகத்தில் வருமானவரித் துறை சோதனை நடந்தபோது, “வருமானவரித் துறை மத்திய அரசின் கீழ் அமைந்திருந்தாலும், அதற்கென தனி சட்டம் இருப்பது அனைவருக்கும் தெரியும். தலைமைச் செயலகத்தில் சில ஆதாரங்கள் இருப்பதாலேயே சோதனை நடக்கிறது” என்றும் அவர் கூறியிருந்தார். இதை முதல்வருக்கு நினைவுகூர விரும்புகிறோம்.

இந்த சோதனைகளில் அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏதுமில்லை. ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. யாரையும் பழிவாங்கும் அவசியம் பாஜகவுக்கு இல்லை. செந்தில்பாலாஜியின் இலாகாவை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நான் அவதூறு செய்ததாகக் கூறுவதை ஏற்க முடியாது. அண்மையில் அமித் ஷா தமிழகம் வந்தபோது, முன்னாள் முதல்வர் பழனிசாமியை சந்தித்து, அவருடன் உணவருந்த விரும்பினார். ஆனால், சந்திப்பு நடைபெறவில்லை.

பாஜக ஆட்சி குறித்து கருத்து கேட்கவே முக்கியப் பிரமுகர்களை அமித் ஷா சந்தித்தார். அது அரசியல் சாராத சந்திப்பு. அவர் யாரையும் புறக்கணிக்கவில்லை. அதிமுகவுடன் இப்போதும் கூட்டணியில்தான் இருக்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

சட்டத்துக்கு உட்பட்டு சோதனை: புதுச்சேரியில் செய்தியாளர் களிடம் பேசிய மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன், ‘‘அமலாக்கத்துறை தன்னிச்சையான அமைப்பாகும். அவர்களுக்கு கிடைத்த தகவலின்படியே சட்டத்துக்கு உட்பட்டே, அமைச்சர் செந்தில்பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. எந்த தூண்டுதல் பேரிலும் சோதனைநடக்கவில்லை’’ என்றார்.

நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘தான் தூய்மையானவன் என்பதை காட்டவேண்டிய பொறுப்பு செந்தில்பாலாஜிக்கு உள்ளது. தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை விலக்கி வைப்பதுஅரசுக்கும், திமுகவுக்கும் நல்லது. ஊழல் வழக்கில் கைதானவரை முதல்வர் சென்று பார்த்துள்ளார். தவறு செய்தவர்கள் மீது நேர்மையாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x