

போடி: அகல ரயில்பாதை பணிகள் முடிந்த நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு போடிக்கு இன்று முதல் ரயில் சேவை தொடங்குகிறது. போடியில் இன்று இரவு நடை பெறும் விழாவில் மத்திய இணை அமைச்சர் முருகன் கலந்துகொள்கிறார்.
மதுரை - போடி வழித்தடத்தை அகல ரயில்பாதையாக மாற்றுவதற்காக 2010-ம் ஆண்டு டிசம்பருடன் மீட்டர்கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு மே 27-ம் தேதி முதல் மதுரையில் இருந்து தேனி வரை தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (வியாழன்) முதல் போடி வரை இந்த ரயில் நீட்டிக்கப்பட உள்ளது.
இதற்காக ஓஎம்எஸ் எனப்படும் சிறப்பு ஆய்வு ரயில் மூலம் நேற்று சோதனை நடைபெற்றது. தண்டவாளங்களின் அதிர்வு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அனைத்துக்கட்ட பரிசோதனை களும் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் போடிக்கு ரயில் சேவை தொடங்குகிறது. மதுரையில் இருந்து தினசரி ரயில் (06701) காலை 8.20-க்கு புறப்பட்டு 10.30 மணிக்குப் போடியை வந்தடைகிறது.
மீண்டும் மாலை 5.50-க்கு புறப்படும் இந்த ரயில் (06702) இரவு 7.50 மணிக்கு மதுரையைச் சென்றடைகிறது. இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் போடிக்கு ரயில் (20601) இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு போடியை வந்தடைகிறது.
மறுமார்க்கமாக போடியில் இருந்து செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை சென்ட்ரலுக்கு ரயில் (20602) இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னையைச் சென்றடைகிறது. இந்த ரயில் இயக்கத்துக்கான தொடக்க விழா போடி ரயில்நிலையத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.