Published : 12 Jun 2023 04:20 PM
Last Updated : 12 Jun 2023 04:20 PM

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.70 கோடியில் பணிகள் | திறப்பு எப்போது? - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டி பல்வேறு பணிகள் ரூ.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் ரூ.66.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலப் பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்," கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல், மழைக் காலங்களில் தண்ணீர் தேக்கம், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை திட்டமிடப்படாமல் இந்தப் பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, இந்தப் பேருந்து நிலையத்தில் பல்வேறுகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 6 மாத காலங்களில் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் பொறுப்பை முதல்வர் எனக்கு அளித்த பிறகு 8 முறை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேரடியாக களஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 10-க்கும் மேற்பட்ட கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

இதன் பயனாக, அங்கு மேலும் தேவைப்படும் அடிப்படை வசதிகள், பேருந்து நிலையம் திறக்கப்பட்டவுடன் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக, தற்போது புதிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும், அயனஞ்சேரியையும் இணைக்கின்ற வகையில் ஒரு சாலை 1.20 கி.மீ நீளத்திற்கு நடைபெற்று வருகிறது. அதேபோன்று போலீஸ் அகாடமி சாலையில் சுமார் 6 கி.மீ. நீளத்திற்கு புதிதாக சாலை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 2 கி.மீ. வனத்துறையின் வசம் உள்ளதால், வனத்துறையிடம் முன்அனுமதி பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் சாலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றபொழுது, மாற்றுப்பாதையாக 6 கி.மீ. அளவிற்கு சாலை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை இல்லாமல் சமீபத்தில் பெய்த சிறு மழைக்கு கூட பெருமளவு தண்ணீர் தேங்கி நின்ற காரணத்தினால் சுமார் ரூ.13 கோடி மதிப்பீட்டில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்க பணிகள் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளது.

கிளாம்பாக்கத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் ஒரு பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டி, பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஒரு புதிய பூங்கா சுமார் 6 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசல், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகின்ற பொழுது, அதனை முறையாக சரிசெய்வதற்கு ஏதுவாக கிளாம்பாக்கத்தில் ஒரு காவல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்குண்டான கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட உள்ளது.

நாள்தோறும் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்வார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளதால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முதலுதவிக்காக ஒரு மருத்துவ மையம் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பிற்கு பிறகு எந்தவகையிலும் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படக் கூடாது என்பதற்காக திட்டமிடப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆம்னி பேருந்து நிலையத்திற்கு என்று தனியாக ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, களஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 5 ஏக்கர நிலப்பரப்பில் சுமார் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டி பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் சுமார் ரூ.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருதல், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் நிறைவேற்றி விரைவில் இந்தப் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்" என்று அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x