Published : 04 Jun 2023 12:54 PM
Last Updated : 04 Jun 2023 12:54 PM

ஒடிசா ரயில் விபத்து | தமிழகத்தைச் சேர்ந்த 8 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

சென்னை: "ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 8 பேரை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டோம். அவர்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே இவர்களின் முகவரிகளை ரயில்வே துறையிடம் இருந்து பெற்று, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "ஒடிசாவில் நிகழ்ந்த விபத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள், 200 பேர் சிறப்பு ரயில் மூலமாக, அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.

அதன்படி, சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பயணிகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்திருக்கிறோம். வருவாய்த்துறை சார்பில் வந்தவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கியிருக்கிறோம். மக்கள் நல்வாழ்வுத்துறை மூலமாக செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவ உதவி உபகரணங்களுடன் தயார் நிலையில் வந்திருந்தனர். பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், தமிழக அரசின் பேருந்துகள், கட்டணமில்லா டாக்சி, என அனைத்தும் தயார் நிலையில் ஏற்பாடு செய்திருந்தோம்.

சென்னை வந்த பயணிகளில் 29 பயணிகளுக்கு மட்டும் மருத்துவப் பரிசோதனை தேவைப்பட்டது. எனவே, அவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை செய்திருக்கிறோம். அதில் காயமடைந்திருந்த 4 பேர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டது. அதில் மூன்று பேர் சிகிச்சைப்பெற்று திரும்பிவிட்டனர். ஒருவர் மட்டும் மருத்துவமனையில் உள்நோயாளியாக இருக்கிறார்.
வருவாய்த்துறையின் சார்பில் அதிகாரிகள் உள்பட 75 பேரும், மருத்துவத்துறை சார்பில் அதிகாரிகள் உள்ளிட்ட 70 பேரும் அங்கு வந்திருந்தனர்.

ஒடிசாவைப் பொருத்தவரைக்கும் மொத்தம் 1091 பேர் இந்த விபத்தில் சிக்கியிருக்கிறார்கள். இதில் 288 பேர் இறந்துள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது. 56 பேருக்கு பலத்த காயமும், 747 பேருக்கு சாதாரண காயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் 70 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த 70 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இல்லை என்பதை, தமிழகத்தில் இருந்து சென்றுள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது இல்லாமல், 8 பேரை நாங்கள் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டோம். அவர்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே இவர்களின் முகவரிகளை ரயில்வே துறையிடம் இருந்து பெற்று, அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். இன்று பகல் ஒடிசாவில் இருந்து சென்னைக்கு மீண்டும் ஒரு சிறப்பு ரயிலும், நாளை பகலிலும் ஒரு ரயிலும் வரவிருக்கிறது. இந்த ரயில்களில் வருபவர்களுக்கான மருத்துவ உதவிகள், வீடுதிரும்புவதற்கான வசதிகளை ஏற்படுத்திதர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒரே ஒரு நபர் வந்தால்கூட அவருக்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" என்றார்.

தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியால் போன 8 பேர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், " 200 பேர் இன்று காலை வந்த சிறப்பு ரயிலில் அங்கிருந்து கிளம்பியுள்ளனர். ஆனால், சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தவர்கள் 137 பேர்தான். எஞ்சியவர்கள் வரும் வழிகளிலேயே அவர்களுடைய ஊர்களில் இறங்கிவிட்டனர். ஒருவேளை அவர்கள் இறந்திருந்தால், உடல் அடையாளம் காணப்பட்டால்தான், முடிவெடுக்கப்படும்.

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த 128 பயணிகள்தான் முன்பதிவு செய்து வந்துள்ளனர். அரசிடம் உள்ள தகவல்களின்படி, தமிழகத்தைச் சேர்ந்தவர்களை தேடி வருகிறோம்" என்று அவர் கூறினார்.

இந்நிலையில், இதுவரை சேகரிக்கப்பட்ட விபரத்தின் அடிப்படையில் தொடர்புகொள்ள இயலாத நிலையில் உள்ள (1) நாரகணிகோபி, ஆண், வயது - 34 , (2) கார்த்திக், ஆண், வயது -19, (3) ரகுநாத், ஆண். வயது - 21, (4) மீனா, பெண், வயது - 66, (5) எ. ஜெகதீசன், ஆண், வயது - 47, (6) கமல், ஆண், வயது - 26, (7) கல்பனா, பெண், வயது - 19, (8) அருண், ஆண், வயது -21, இந்த 8 நபர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர், இவர்கள் குறித்த தகவல் அறிந்திருப்பின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு எண்களில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகவல்களை, மாநில அவசரகால செயல்பாட்டு மைய உதவி எண்களான, கட்டணமில்லா தொலைபேசி – 1070 மற்றும் செல்பேசி – 9445869843 என்ற எண்களிலும் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x