Last Updated : 09 Aug, 2024 12:55 PM

 

Published : 09 Aug 2024 12:55 PM
Last Updated : 09 Aug 2024 12:55 PM

நீங்கள்தான் அந்த வி.ஐ.பி | சக்ஸஸ் ஃபார்முலா - 12

இருபதாவது முறை நேர்காணலுக்குச் சென்று, “இல்ல, நீ வேண்டாம்...” என்கிற நிராகரிப்பைச் சுமந்து அறைக்குத் திரும்பினார் சச்சு.

தனக்குத்தானே பேசிக் கொண்டார்.

“நான் எங்க உருப்படப் போறேன்? இந்த ஜென்மத்துல நல்ல வேலை கிடக்கப் போவதில்ல. எதுக்கும் லாயக்கில்ல.”

“சச்சு, யாரைத் திட்டிட்டு இருந்தே?”

“என்னை கலாய்கறீயா?”

“இல்ல நிஜமாவே கேட்கிறேன்...”

“என்னைத்தான்...”

சச்சுவிடம் ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டேன். அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

1950ஆம் ஆண்டு மருத்துவ ஆராய்ச்சி ஒன்று நடந்தது. யாராலும் நான்கு நிமிடங்களுக்குள் ஒரு மைல் தூரம் ஓட முடியாது என்று கண்டுபிடித்தார்கள். இதற்கு மேல் ஓடும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை என்றார்கள்.

அப்போது மருத்துவத் துறையில் படித்துக் கொண்டிருந்த ரோகர் ஓட்டப் பந்தயங்களிலும் ஆர்வமுடையவராக இருந்தார். அவருக்கு இதை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதற்காக அவர் எப்படி எல்லாம் உழைக்க வேண்டுமோ, உழைக்க முடியுமோ அதையெல்லாம் செய்தார். மற்றவர் கண்களுக்குத் தெரியாத மற்றொன்றையும் அவர் அதில் சேர்த்துக் கொண்டார். அது தனக்குத்தானே பேசிக்கொள்வது. இதை ஆங்கிலத்தில் செல்ஃப் டாக் (self Talk) என்று சொல்வார்கள்.

‘நான் நான்கு நிமிடங்களுக்குள் ஓட ஒரு வழியைக் கண்டுபிடிப்பேன். ஓடுவேன். என்னால் முடியும்’ போன்ற ஆக்கப்பூர்வமான வார்த்தைகள் அவரது ஆழ்மனத்தில் சென்று இலக்குக்கு பலம் சேர்த்தது.

1954 ஆம் ஆண்டு 3 நிமிடம் 59.4 விநாடிகளில் ஒரு மைல் ஓடிச் சாதித்துக் காட்டினார். இந்தக் கதை விளையாட்டு உளவியல் பாடங்களில் இடம்பெற்றிருக்கிறது.
யாராலும் முடியாது என்று ஆராய்ந்து சொன்னதை, அவர் செல்ஃப் டாக் மூலம் மனத்தில் பதிய வைத்து, நம்பிக்கையோடு உழைத்தார், வெற்றி பெற்றார்.

இதைத்தான் சுவாமி விவேகானந்தர், “ஒரு நாளைக்கு ஒருமுறையாவது உங்களுடன் பேசுங்கள், இல்லையெனில் இந்த உலகில் ஒரு சிறந்த நபரை இழக்கிறீர்கள்” என்றார்.
நாம் அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் பேசிக் கொண்டிருக்கிறோம். எப்படி அதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

1. விழிப்புணர்வு இல்லாமல் நமக்குள் இந்தப் பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. எண்ணங்கள் மூலம் பேசிக் கொண்டே இருக்கிறோம். நமக்குள் எப்படிப்பட்ட எண்ண அலைகள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
2. மற்றவர்களிடம் நாம் பேச, நம்மிடம் மற்றவர்கள் பேச எப்படி நேரம் ஒதுக்குகிறோமோ அப்படியே இதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.
3. பேசச் சொன்னேன் என்பதற்காக வாய் விட்டுச் சத்தமாகப் பேச வேண்டும் என்பதல்ல. மனதிற்குள் பேசலாம். அதை யாரும் கேட்க முடியாது என்பது கூடுதல் வசதி.
4. எதிர்மறை எண்ணங்கள் வரும்போது, சரியான எண்ணங்களைத் தேர்வு செய்வதற்கு இது சிறந்த வழி.
5. உங்கள் வெற்றி தோல்விகளுக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு.ஆகையால்
முதலில் உங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். அதற்கு செல்ஃப் டாக் சுலபமான வழி.
6. ஆரம்பத்தில் தியானம் செய்யும் போது மனம் அலைபாயும். அதைப் போலவே செல்ஃப் டாக் விழிப்புணர்வோடு ஆரம்பிக்கும் போதும் சில குழப்பங்கள் வரும்.
தேவையற்ற விஷயங்களைக் களைக்க உதவும்.
7. ஆயிரத்தெட்டு இரைச்சல்களை வைத்துக் கொண்டு பேசுவது கடினம். இது உங்கள் வாழ்க்கையை மாற்றும் எளிய வழி என்பதைத் தெரிந்து கொண்டு சரியான மொழியைக் கையாள வேண்டும். பேச வேண்டிய இடத்தில் பேசவும், எண்ணங்கள் மூலம் தொடர்பு கொள்ளவும் பழக்கத்தால் வந்துவிடும்.
8. செல்ஃப் டாக் மூலம் மறைந்து இருக்கும் பல ஆற்றல்களைத் தெரிந்து கொள்வீர்கள். பயங்களையும் கண்டறிவீர்கள்.
9. மனத்திற்குப் பிடித்தவர்கள் உங்களைப் புரிந்துகொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட உங்களை நீங்கள் புரிந்துகொள்வது அவசியம். அதற்குத் தனிமையில் பேசுவது , யோசிப்பது உதவும்.
10. விழிப்போடு செய்யும்போது மன அழுத்தங்கள் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
உங்கள் வாழ்க்கையில் முக்கியமான நபராக மாற வேண்டும் என்றால், உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி மனம் விட்டுப் பேசுங்கள்.
நீங்கள் ஆரம்பிக்கப் போகும் வேலை அல்லது செய்து கொண்டிருக்கும் செயலில் முதலில் உங்களுக்கு ஆழமான நம்பிக்கை இருக்க வேண்டும். அதற்கு உரமாக செல்ஃப் டாக் இருக்கும்.

- கட்டுரையாளர், எழுத்தாளர். 12 நூல்களை எழுதியிருக்கிறார். துபாயில் வசிக்கிறார்.

> முந்தைய அத்தியாயம்: வெற்றியை வரவேற்க, தோல்வி அவசியம் | சக்ஸஸ் ஃபார்முலா - 11

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x