Last Updated : 19 Jul, 2024 04:51 PM

 

Published : 19 Jul 2024 04:51 PM
Last Updated : 19 Jul 2024 04:51 PM

சரியான முடிவுகள் சாதனையின் முதல் படி | சக்சஸ் ஃபார்முலா - 9

சச்சு ஒரு முடிவை எடுத்துவிட்டுப் பின்னர் வருந்துவது வாடிக்கையான விஷயம். அன்று அலுவலகத்திலிருந்து வந்தவர், “நஸீ நான் தப்புப் பண்ணிட்டேன்” என்றார்.

“என்ன ஆச்சு சச்சு?”

“போன மாசம் டீம் லீடர் கூப்பிட்டு ஆன் சைட் ப்ராஜக்ட் வருது. நம்ம டீம்ல இருந்து உங்களை அனுப்பலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்னு சொன்னார்.”

“ரியலி! நல்ல விஷயம் சச்சு. எத்தனை மாசத்திற்கு?”

“எனக்கு எங்கேயும் போக விருப்பம் இல்ல, விருப்பமுள்ளவரை அனுப்புங்கன்னு சொல்லிட்டேன்.”

“என்ன காரணம் சச்சு?”

“ஒண்ணும் பெரிய காரணம் இல்ல. புது இடமெல்லாம் எனக்கு செட் ஆகாது. புது நாடு சான்ஸே இல்ல. எப்படி இருக்குமோன்னு ஒரு தயக்கம்தான்.”

“சரி இப்ப ஏன் ஃபீல் பண்ற?”

“போயிருக்க வேண்டும் நஸீ. ஆறு மாசமாவது போயிருக்கணும். அது இன்னொரு நல்ல வாய்ப்பைக் கண்டிப்பா தந்திருக்கும்” என்றார்.

சச்சு மட்டுமில்லை நம்மில் பலர் சரியான முடிகளைத் தேர்வு செய்ய அவ்வப்போது தவறிவிடுகிறோம். சிலர் சட்டென்று முடிவு செய்து விடுவார்கள். சிலர் சிறிது காலம் எடுத்து ஆராய்ந்த பின்னர், என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவுகளைத் தேர்வு செய்வார்கள். அப்படி எடுக்கும் முடிவுகள் ஓரளவு பயன் அளிக்கும். வாழ்க்கையைச் சரியாக வழிநடத்திச் செல்லச் சரியான முடிவுகள் முதல் படி. எல்லாவற்றுக்கும் ஒரு சூத்திரம் இருப்பது போல் இதற்கும் வெற்றியாளர்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.



1. சூழல் எதுவாக இருந்தாலும் சட்டென்று முடிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். சரியான முடிவு என்று தெரிந்திருந்தாலும் அதற்கான நேரத்தை எடுத்துக் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.

2. சூழலை ஆராய வேண்டும். சில நேரம் மேலோட்டமாகத் தெரிவது, ஆராய்ந்த பின்னர் பிரச்சினையை வேறு விதமாக அணுக முடியும்.

3. ஆராய வேண்டும் என்றால் கேள்விகளைக் கேளுங்கள். பிரச்சினைகள் உங்களை மட்டும் சார்ந்துள்ளதா அல்லது மற்றவர்களும் இதில் இருக்கிறார்களா? அவர்கள் பங்கு எந்த எல்லை வரை உள்ளது போன்ற தகவல்கள் வேண்டும்.

4. ஓரளவு பிரச்சினைகளின் ஆழம் தெரிந்துவிட்டால், மற்றவர்கள் மேல் பழி சுமத்தாமல் உங்கள் பங்கு என்ன என்கிற தெளிவு கிடைத்துவிடும்.

5. நேரம் எடுத்து ஆராய்ந்த பின்னர் ஒரு வழி அல்ல பல வழிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. முதலில் இது சிறிது குழப்பமானதாகத் தோன்றினாலும் முடிவெடுக்க உதவும்.

6. மேலே சொன்ன பல வழிகளைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வழியிலும் இருக்கும் சாதக பாதகம் என்ன என்பதை அறிந்து கொண்டால் தேர்வு செய்ய சுலபமாக இருக்கும்.

7. இப்பொழுது பிரச்சினைக்கான தீர்வைத் தேர்வு செய்துவிட்டோம். அந்தத் தீர்வைச் செயல்படுத்தும் முன் மீண்டும் ஒருமுறை எந்தச் சமரசமும் இல்லாமல் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும்.

8. இப்பொழுது நீங்கள் தேர்வு செய்த தீர்விற்கான திட்டம் இருக்க வேண்டும்.

9. மிகக் கவனமாகத் தேர்வு செய்த தீர்வின் ஆழம், திட்டத்தைச் செயல்படுத்தும்போதுதான் தெரியும். இடையில் சில சிக்கல்கள் வந்தாலும் நீங்கள் முடிவெடுக்கும் போது கணக்கில் கொண்ட பல விஷயங்கள் கைகொடுக்கும்.

10. நீங்கள் எடுத்த தீர்வுகளில், தேர்வுகளில், முடிவுகளில் மாற்றங்கள் தேவைப்பட்டால் தயங்காமல் செயல்படுத்துங்கள்.

இப்படி ஒரு தீர்வை முடிவு செய்யும் போது எதையும் கண்மூடித்தனமாக அணுகாமல் சிறந்த முறையில் கையாள முடியும்.

சச்சு இதைச் செய்திருந்தால், போகாமல் இருப்பதற்கான சரியான காரணங்களையாவது கண்டுபிடித்திருக்க முடியும். அல்லது போனால் என்ன பயன் என்று ஆராயும்போது சரியான முடிவைத் தேர்வு செய்திருக்க முடியும்.

முடிவு செய்யும் தெளிவும் ஞானமும் கிடைத்துவிட்டால், வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் எளிதாகக் கையாள முடியும்.

- கட்டுரையாளர், எழுத்தாளர். 12 நூல்களை எழுதியிருக்கிறார். துபாயில் வசிக்கிறார்.

> முந்தைய அத்தியாயம்: ‘நிலைத்தன்மை’ வெற்றியின் ரகசியம் | சக்ஸஸ் ஃபார்முலா - 8

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x