Last Updated : 20 Apr, 2015 11:01 AM

 

Published : 20 Apr 2015 11:01 AM
Last Updated : 20 Apr 2015 11:01 AM

இந்திய ரூபாய் மாற்று முழுவதையும் சந்தை மயமாக்குவது நல்லதா?

“அடுத்த சில வருடங்களில் இந்திய ரூபாய் full convertibility நிலையை அடையும் என்று நம்புகிறேன்” ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.

“இந்தியா உலக அளவில் ஒரு முதன்மை பொருளாதாரமாக மாற இந்திய ரூபாய் full convertibility நிலையை அடையவேண்டும்” ஜெயந்த் சின்ஹா நிதித்துறை இணை அமைச்சர்.

கடந்த சில நாட்களில் இவர்கள் இருவரும் இவ்வாறு பேசி இருப்பது இந்திய ரூபாயை உலக அளவில் ஒரு முதன்மை பணமாக எடுத்துச்செல்லக் கூடிய முயற்சி இனி நடைபெறும், அதற்கு முதல் கட்டமாக full convertibility நிலையை அது அடையவேண்டும் அதனை நோக்கி இந்திய பொருளாதாரக் கொள்கைகள் இனி இருக்கும் என்று தெரிகிறது.

full convertibility என்றால் என்ன?

இந்திய ரூபாயை மற்ற நாட்டு பணத்திற்கு இணையாக மாற்றுவது சந்தையில் நடைபெறும். இதில் வியாபாரம், வெளிநாட்டுச் சுற்றுலா, போன்ற செயல்களில் பெறப்பட்ட அல்லது தேவைப்படும் அந்நிய செலாவணியை எவ்வித முன் அனுமதியும் இன்றி அந்நிய செலாவணி சந்தையில் நாம் வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆனால் அந்நிய நாட்டில் முதலீடு செய்ய அந்நிய செலாவணியை பெறுவது, அதே போல் அந்நிய நாட்டினர் நம் நாட்டில் முதலீடு செய்ய அவர்கள் பணத்திற்கு இணையாக நம் ரூபாயை வாங்குவது எல்லாமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இவ்வாறு வியாபாரம் போன்ற ஒரு சில நடவடிக்கைக்கு சந்தையில் அந்நிய செலாவணி மாற்றம் செய்வதும், முதலீடு போன்ற நடவடிக்கைக்கு அந்நிய செலாவணி மாற்றத்தை கட்டுப்படுத்துவதும் partial convertibility என்று பெயர். முதலீடு செய்வதற்கான அந்நிய செலாவணி மாற்றத்தின் மீது உள்ள கட்டுப்பாட்டை நீக்கினால் நாம் full convertibility நிலையை அடைகிறோம்.

இதுவரை ஏற்றுமதி, இறக்குமதி, தொழிலாளர்கள் நாடுகளுக்கிடையே பணம் அனுப்புவது, வங்கி, காப்பீடு போன்ற பணிகள் ஏற்றுமதி, இறக்குமதி என எல்லாவற்றிக்கும் இந்திய-அந்நிய பணங்களை மாற்றுவது சந்தையில்தான். அதாவது, அந்நிய செலுத்து நிலை கணக்கில் (BoP Accounts) நடப்புக் கணக்கு (Current account) முதல் கணக்கு (Capital Account) என்று இரு பகுதிகள் உள்ளன. இதில் நடப்பு கணக்கில் உள்ள எல்லா வர்த்தகத் தேவைகளுக்கும் எளிதில் நாட்டிற்குள் பணத்தை எடுத்துவந்து பிறகு எடுத்து செல்லலாம். இதனை current account convertibility என்று சொல்லலாம்.

முதல் கணக்கில் உள்ள நேரடி அந்நிய முதலீடு, பங்குச்சந்தை முதலீடு, நீண்ட கால கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது என்ற எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் பணத்தை எளிதில் இந்தியாவிற்குள் எடுத்துவந்து பிறகு எடுத்து செல்லலாம். ஆனால் மிக குறுகியக்காலக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி வேண்டும். எனவே முதல் கணக்கில் பணமாற்றம் செய்ய கட்டுப்பாடுகள் இருப்பதை தளர்த்துவதே capital account convertibility என்று பெயர். அவ்வாறு இரண்டு கணக்குகளிலும் பணத்தை எடுத்துவரவும், எடுத்துச் செல்லவும் கட்டுப்பாடுகள் இல்லை என்றால் full convertibility என்று அர்த்தம்.

என்ன நன்மை?

full convertibility இருக்கும் போது நமது நாட்டில் உற்பத்தியும் வியாபாரமும் செய்வது லாபமானது என்று அந்நிய முதலீட்டாளர்கள் நினைத்தால் எளிதில் பணத்தை இங்கு கொண்டுவரலாம். அதன் மூலம் உள்நாட்டில் இல்லாத முதலீட்டை வெளிநாட்டிலிருந்து எளிதில் நம்மால் திரட்ட முடியும். நமது நிதித்துறையில் உள்ள நிறுவனங்கள் தங்களின் முதலீடுகளை வெளிநாடுகளில் செய்யவும், நிதி துறையில் உள்ள risk-ஐ எளிதில் பரப்பவும் full convertibility உதவி செய்யும்.

நமது அரசும், நிறுவனங்களும் தொடர்ந்து பொருளாதார ரீதியில் செம்மையாக செயல்படவேண்டிய அவசியம் உள்ளதால், பொருளாதார வளர்ச்சியும் சீராக இருக்க வாய்ப்பு உண்டு. ஏற்ெகனவே முதல் கணக்கில் பல வர்த்தகங்களுக்கு convertibility இருப்பதால், மீதம் உள்ள ஒரு சில முதல் கணக்கு வர்த்தகங்களுக்கு மட்டுமே convertibility அளிக்கவேண்டும். இதை செய்தால் மேலே கூறிய நன்மைகள் பெறலாம் என்றும் நினைக்கின்றனர்.

full convertibility ஏற்படுத்த என்ன செய்யவேண்டும்?

1997லும் 2007லும் full convertibility ஏற்படுத்த மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் முயற்சித்து தாராபூர் என்பவர் தலைமையில் குழுக்களை அமைத்து ஆலோசனை பெற்றது.

இதில் full convertibility வேண்டும் எனில் நமது நிதித்துறை மிக திறமையாக, குறிப்பாக வங்கிகள் திறமையாக இருக்கவேண்டும். அரசின் நிதிப் பற்றாக்குறை குறைவாக இருக்க வேண்டும். நாட்டின் பணவீக்கமும், வட்டி விகிதமும் குறைவாக இருக்கவேண்டும். இவை எல்லாமே நீண்ட காலத்தில் குறைவாகவும் நிலையாகவும் இருப்பது அவசியம். இந்த நிபந்தனைகளை அடைவதற்காக இந்தியா தனது பொருளாதாரக் கொள்கைகளை எடுக்க வேண்டும்.

பாதகம் என்ன?

குறுகியகால முதலீடுகள் பெருமளவில் வருவதும், போவதுமாக இருந்தால், இந்திய ரூபாயின் மாற்று விகிதம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். இதனால் பன்னாட்டு வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளாகும். அதே போல் வட்டி விகிதத்தையும், பணவீக்கத்தையும் குறைந்த அளவில் நிலையாக வைத்துக்கொள்ள முடியாது.

இப்படி தொடர்ச்சியான பொருளாதார சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 2013-ம் ஆண்டு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வேகமாக குறைந்தபோது மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் முதல் கணக்கின் வழியாக அந்நிய செலாவணி வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருக்க பல தடைகளை ஏற்படுத்தின. நடப்பு கணக்கில் கூட தங்கம் இறக்குமதி செய்வதில் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. இவ்வாறு இந்திய ரூபாயின் அந்நிய செலாவணி மதிப்பு அவ்வப்போது மாறும்போது நாம் மிகக் கடினமான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கவேண்டிவரும்.

மேலும் இந்த நிகழ்வுகள் அவ்வப்போது நடந்தால் சிக்கல் இன்னும் அதிகமாகும். எனவே நமது பொருளாதாரம் இன்னும் வளர்ச்சி அடைந்து, நவீன பொருளாதாரமாக மாறிய பிறகு full convertibility நிலையை எடுக்கலாம். full convertibility இருந்தால், நமது பொருளாதார கொள்கைகளையும் பணக் கொள்கையையும் சந்தையின் போக்கிற்கேற்ப மாற்றவேண்டிய அவசியம் உள்ளது.

இதனால் கொள்கை முடிவுகளில் நமது சுதந்திரம் பறிபோகும் என்பதையும் கவனிக்கவேண்டும்.

நமது நிதித்துறையில் உள்ள நிறுவனங்கள் தங்களின் முதலீடுகளை வெளிநாடுகளில் செய்யவும், நிதி துறையில் உள்ள risk-ஐ எளிதில் பரப்பவும் full convertibility உதவி செய்யும். நமது அரசும், நிறுவனங்களும் தொடர்ந்து பொருளாதார ரீதியில் செம்மையாக செயல்படவேண்டிய அவசியம் உள்ளதால், பொருளாதார வளர்ச்சியும் சீராக இருக்க வாய்ப்பு உண்டு.

seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x