Last Updated : 17 Oct, 2024 04:04 PM

 

Published : 17 Oct 2024 04:04 PM
Last Updated : 17 Oct 2024 04:04 PM

கல் குத்து விளக்குகள் தயாரிப்பு, விற்பனையில் கலக்கும் கோவை!

கோவையில் கல் குத்து விளக்குகள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள். | படம்: ஜெ.மனோகரன் |

கோவை: கடவுள் சிலைகள் மற்றும் உருவப் படங்கள் முன்பு தீபங்களை ஏற்றி, பிரகாசமாக ஒளிர விட்டு வழிபாடு நடத்துவது காலம் காலமாக இருந்து வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் மண்ணால் ஆன தீப விளக்குகள், எளிதில் உடையாத வெள்ளி, தங்க முலாம் பூசப்பட்ட உலோகத்தால் செய்யப்பட்ட தீப விளக்குகள், குத்து விளக்குகள் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு, கற்களால் தயாரிக்கப்பட்ட விளக்குகளை வாங்கி, தீபம் ஏற்றி வழிபடும் பழக்கம் இருந்தது.

குறிப்பாக, கோயில்களில் கொடிமரம் அருகே, வளாகத்தின் பல்வேறு இடங்களில் கற்களால் தயாரிக்கப்பட்ட குத்துவிளக்குகள் வைக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது.காலப் போக்கில், கற்களால் தயாரிக்கப்பட்ட குத்துவிளக்குகளின் பயன்பாடு மக்களிடம் குறைந்துள்ளது. இந்தச் சூழலில், கடந்த சில ஆண்டுகளாக, கற்களினால் தயாரிக்கப்பட்ட குத்துவிளக்குகளின் பயன்பாடு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

குறிப்பாக, பெரிய நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் கட்டுபவர்கள், தங்களது கட்டிடத்தில் முகப்புப் பகுதியில் அலங்காரத்துக்காகவும், வழிபாட்டுக்காகவும் வைக்க கற்களினால் ஆன குத்துவிளக்குகளை ஆர்டர் கொடுத்து பிரத்யேகமாக செய்து வாங்குகின்றனர். அதுபோல், கார்த்திகை தீபம் போன்ற பண்டிகை மாதங்களில் சிறிய அளவிலான கற்களால் செய்யப்பட்ட விளக்குகளை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது.

கோவை சங்கனூரில் கல் குத்து விளக்கு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள மகேஸ்வரன் கூறியதாவது: கல் குத்து விளக்கு தயாரிப்பு என்பது ஒரு கலை. தந்தையை பின்பற்றி, நானும் கல் குத்து விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். விளக்கின் அடிப்பகுதியில் பீடம், அதன் மேல் தண்டு, அதன் மேல் தட்டு, இறுதியாகதலைப் பகுதியில் கிரீடம் ஆகியவை கல் குத்து விளக்கின்முக்கிய அம்சங்கள். இவை தனித்தனியாக தயாரிக்கப்பட்டு ஒன்றாக இணைக்கப் படுகின்றன.

ஊத்துக்குளி, வாரிக்கோட்டை, இடையர்பாளையம்உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் பாறைகளை, பட்டறையில் கொத்தி, செதுக்கி, லேத்தில் கடைந்து கல் குத்து விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது பாறைகளில் கற்கள் எடுப்பது சிரமமாக உள்ளது. ஒரு கல் குத்து விளக்கு தயாரிக்க குறைந்தபட்சம் 2 நாட்கள் ஆகி விடும்.ஒரு அடி, இரண்டரை அடி, மூன்றரை அடி, ஐந்தரை அடி, பத்தரை அடி, பனிரெண்டரை அடி ஆகிய உயர அளவுகளில் கல் குத்து விளக்குகள் உள்ளன.

ஒரு அடி, இரண்டரை அடிக்கு ஒரு தட்டு, மூன்றரை அடிக்கு 3 தட்டு, ஐந்தரை அடிக்கு 5 தட்டு, பத்தரை அடி, பனிரெண்டரை அடிக்கு 7 தட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கும். சாதாரணமாக சிறிய விளக்கு 60 கிலோ எடை கொண்டதாக இருக்கும். உயரம் அதிகரிக்க எடையும் அதிகரிக்கும். முன்பு கோயில் நிர்வாகங்களின் சார்பில் அதிகளவில் வாங்கப்பட்டு வந்தன. தற்போது, பொதுமக்களும் தங்களது வீடுகள், வர்த்தக மையங்களில் வைக்க கல் குத்து விளக்குகளை ஆர்வத்துடன் ஆர்டர் கொடுத்து செய்து வாங்குகின்றனர்.

கோவையில் சங்கனூர், சுந்தராபுரம், காரமடை ஆகிய இடங்களில் கல் குத்துவிளக்கு தயாரிக்கும் மையங்கள் உள்ளன. கோவையில் கல் குத்து விளக்குகளின் விற்பனை அதிகம் உள்ளது. தமிழகத்தின் முக்கிய கோயில்களுக்கு எங்கள் கல் குத்து விளக்குகள் செல்கின்றன. அறநிலையத்துறையினர் ஆர்டர் கொடுத்தாலும் கல் குத்து விளக்குகள் செய்து கொடுப்போம்.

கோவை மட்டுமின்றி ஹைதராபாத், கேரளா, கா்நாடகா, சென்னை ஆகிய இடங்களிலும் கல் குத்துவிளக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகபட்சமாக ஒரு அடி, இரண்டரை அடி குத்து விளக்குகளை ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.

கல் குத்து விளக்கு ஏற்றுவதால் வீட்டில் உள்ள துன்பங்கள் விலகி, கண் திருஷ்டி கழியும். வாழ்வில் இன்பம் பெருகும். கல் குத்து விளக்கின் தட்டுப் பகுதியில் எண்ணெய் ஊற்றும் வகையில் தனித்தனி குழியாகவும், தனித்தனி குழி இல்லாமல் ஒரே மாதிரியாகவும் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.

கார்த்திகை தீப மாதங்களில் கல் குத்து விளக்குகளுக்கு அதிக தேவை உள்ளது. அப்போது மட்டும் ஆர்டர்கள் அதிகம் இருக்கும். பூம்புகார் விற்பனை மையங்களில் எங்களை போன்ற சிறு தயாரிப்பாளர்கள், தயாரிக்கும் கல் குத்து விளக்குகளை வாங்கி வியாபாரம் செய்தால், எங்களது பொருளாதார தேவை நிவர்த்தியடையும். அரசு இதற்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x