Published : 23 Nov 2013 09:30 AM
Last Updated : 23 Nov 2013 09:30 AM

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறப்பு

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்திருப்பதால் வெள்ளிக் கிழமை பார்வையாளர்களுக்காக சரணாலயம் திறக்கப்பட்டுள்ளது.

வேடந்தாங்கல் வனச்சரகர் தி.முருகேசன் சரணாலயத்தை திறந்து வைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியது: ஏரியில் நீர் குறைவாக இருந்ததால் பறவைகள் வரத்து குறைவாக இருந்தது. இதனால் சரணாலயம் திறப்பு தள்ளிப்போனது. தற்போது வளையபுத்தூர் ஏரியில் இருந்து வேடந்தாங்கல் ஏரிக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. பருவ மழையும் பெய்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால் வெளிநாட்டு பறவைகள் வரத்தும் அதிகரித்துள்ளது.

இந்த சீசனில் ஊசிக்கால் வாத்து, வெள்ளை அரிவால் மூக்கன், பெலிகன் உள்ளிட்ட வகைகள் வந்துள்ளன. தற்போது வேடந்தாங்கல் ஏரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் தங்கியுள்ளன. மாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை ஏரியில் பறவைகள் அதிக அளவில் இருக்கும்.

சரணாலயம் திறக்கப்பட்ட ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு சென்றுள்ளனர். விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறார்களுக்கு தலா ரூ.2-ம், பெரியவர்களுக்கு தலா ரூ.5-ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x