Published : 13 Dec 2013 12:00 AM
Last Updated : 13 Dec 2013 12:00 AM

உலகின் மாசுபட்ட நதிகள் பட்டியலில் முந்தியது பாலாறு! - வேதனை சூழலில் வேலூர் மக்கள்

மனிதன் குடிப்பதற்கு உகந்த ஒரு லிட்டர் குடிநீரில் நைட்ரேட், சோடியம் தலா 20 மில்லிகிராம், ப்ளோரைடு, ஈயம் தலா ஒரு மில்லி கிராம் - மேற்கண்ட அளவுக்கு கீழே இருக்க வேண்டும். இதுவே 250 முதல் 300 டி.டீஎஸ். அளவுள்ள மனிதன் குடிப்பதற்கு உகந்த குடிநீர். ஆனால், பாலாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மக்கள் இந்த அளவுள்ள தண்ணீரை குடித்து சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. சென்னை பெருநகர வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (MIDS) பேராசிரியர் ஜனகராஜன் பாலாறு தொடர்பாக நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவரது ஆய்வில், “உலகில் குடிநீர் பயன்பாட்டில் உள்ளவற்றில் மிகவும் மாசுபட்ட 10 நதிகளில் முதலிடம் வகிக்கிறது பாலாறு. வேலூர் மாவட்ட பாலாற்றில் சுமார் 800 தோல் தொழிற்சாலைகளின் குரோமியம் கழிவுநீர் கலக்கின்றன. பாலாற்றில் மொத்தம் 617 ஆற்று ஊற்று கால்வாய்கள் (Spring channels) இருந்தன. பாலாற்றில் இருந்து விவசாய நிலங்களின் பாசனத்துக்காக வரும் கால்வாய்கள் இவை. இன்று இந்த கால்வாய்கள் முழுவதுவமாக குரோமியம் கழிவுகளால் அழிந்துவிட்டன.

குரோமியம் உப்பு

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை தொடங்கி காவேரிப்பாக்கம் வரை ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வறண்டு குரோமியம் உப்பு பூத்துள்ளது. வேலூர் மாவட்டத்தின் 46 ஊர்களில் 27,800 கிணறுகளின் தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றவை ஆகிவிட்டன. இந்தத் தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

வேலூரில் ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களிடம் குடிநீரைக் காய்ச்சிக் குடிப்பது உள்ளிட்ட குடிநீர் குறித்து எவ்வித விழிப்புணர்வும் இல்லை. இதுகுறித்து காவிரி நீர் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சரவணபாபு, “தீமை விளைவிக்கும் நுண்ணுரியிகள் கலந்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நோய்களை மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், குரோமியம் கலந்த தண்ணீரால் என்ன நோய் வந்திருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. குரோமியம் கலந்த தண்ணீரால் பல வியாதிகள் உண்டாகும்.

பிறக்கும் குழந்தைகளுக்கும் இதன் நோய் எதிரொலிக்கும். ப்ளோரைடு தாக்குதலால் எலும்புகள் வலுவிழப்பதுடன் பற்கள் அரிக்கப்பட்டு மஞ்சள் நிறமாகிவிடும்” என்கிறார்.

தேங்காய் வளர்ச்சி குறைவு

பாலாறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான காஞ்சி அமுதன், “வேலூர் மாவட்டத்தின் 90 சதவீத விவசாயம் மறைமுகமாக பாலாறையும் நேரடியாக கிணற்றுப் பாசனத்தையும் நம்பிதான் இருந்தது. ஆனால், தோல் கழிவுகளால் பாலாறு விஷமானதால் நிலத்தடி நீரும் விஷமாகி அனைத்துக் கிணறுகளும் பயன்படுத்த தகுதியில்லாதவை ஆகிவிட்டன. தண்ணீர் மட்டுமல்ல... கிணற்றில் போடப்பட்டிருக்கும் மோட்டார் உள்ளிட்ட இரும்பு குழாய்களும் சில மாதங்களியே துருப்பிடித்து உதிர்ந்துவிடுகின்றன.

கிணற்றுக்கு அருகில் ஒரு சைக்கிளை ஒரு மாதம் நிறுத்திவைத்தால் சைக்கிள் துருப்பிடித்துவிடும். ஒருகாலத்தில் வேலூர் மாவட்டத்தில் தென்னை விவசாயம் அமோகமாக இருந்தது. இன்றைக்கு தென்னை மரங்கள் குலை தள்ளுவதே அபூர்வமாகிவிட்டது. அப்படியே வந்தாலும் தேங்காயின் வளர்ச்சி சுமார் 60% குறைந்துவிட்டது.” என்றார்.ரூ.10 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி

வேலூர் மாவட்டத் தோல் தொழிற்சாலைகளில் தயாராகும் தோல் பொருட்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி கிடைப்பதாக மத்திய அரசு குறிப்பிடுகிறது. ஆனால், சுற்றுச்சூழல் சார்ந்த பொருளாதார வல்லுநர்களோ ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தாலும் இன்னொரு பக்கம் கழிவு நச்சு பாதிப்பு மூலமும் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறு உருவாக்கம் செய்தல், இயற்கை வளம், மனித வளம் பாதிப்பு ஏற்படுதல் ஆகியவற்றாலும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தோல் தொழிற்சாலை தொழிலை Dirty industry பட்டியலில் வைத்துள்ளன. அதனால்தான், அந்த நாடுகள் தோல் பொருட்களை தயாரிக்காமல் இங்கிருந்து கொள்முதல் செய்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x