Last Updated : 25 Mar, 2025 01:26 PM

 

Published : 25 Mar 2025 01:26 PM
Last Updated : 25 Mar 2025 01:26 PM

மாணவப் படைப்பாளிகளை ஊக்குவித்த கண்காட்சி

அறிவியல் ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வழிகாட்டவும் சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர்களின் ‘பிஏஎல்எஸ்’ எனும் அமைப்பு கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. அறிவியலில் வெவ்வேறு துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய இந்த அமைப்பு, தென்னிந்தியாவின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆர்வமுள்ள மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கி, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க வழிகாட்டுகிறது.

பல்வேறு பகுதிகளில் இருந்தும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற ‘innoWAH’ போட்டியை சென்னை ஐஐடி வளாகத்தில் இந்த அமைப்பு அண்மையில் நடத்தியது. ‘innoWAH’ போட்டியின் இந்த ஆண்டின் கருப்பொருள் ‘தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மாற்றம் - VIKSIT BHARAT@2047’ என்பதாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பல கட்ட ஆய்வுக்குப் பிறகு இந்நிகழ்வின் இறுதிப்போட்டிக்கு 41 கல்லூரிகளில் இருந்து 62 அணிகள் தேர்வாகி இருந்தன.

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்போட்டிக்கான அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் 187 அணிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்பதற்காகத் தங்களது படைப்புகளைச் சமர்ப்பித்தனர். இந்தப் படைப்புகளை ஆய்வு செய்த நிபுணத்துவம் பெற்ற நடுவர் குழு, 128 அணிகளை அடுத்தக்கட்டத்துக்கு தேர்வு செய்தது. இதில் இருந்து 62 அணிகள் இறுதிப்போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டு திறன்மிக்க படைப்புகளைச் சமர்ப்பித்த அணிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற மெடிஸ் நிறுவனர், மேலாண்மை இயக்குநர் சுரேஷ் ராமானுஜம், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x