Last Updated : 03 Dec, 2016 10:41 AM

 

Published : 03 Dec 2016 10:41 AM
Last Updated : 03 Dec 2016 10:41 AM

ரவிவர்மன் வாழும் இல்லம்

வாங்கும் சம்பளத்தில் வாயையும் வயிற்றையும் ஒரு சேரக் கட்டிச் சேமித்த பணம் போதாமல் வங்கியில் கடன் வாங்க மூச்சிரைக்க ஓடி, காத்திருந்து, வியர்வை சிந்தி, பெற்ற பணத்தையும் சேர்த்து ஒரு வீட்டை கட்டி அல்லது வாங்கி நல்ல நாள் பார்த்துப் பாலை காய்ச்சி, குடியேறி, நீண்ட பெருமூச்சுவிட்டு அமர்ந்துவிட்டால் மட்டும் போதுமா?

ஒருவழியாகக் கஷ்டப்பட்டுச் சொந்த வீட்டில் குடியேறிய பின்னாவது வாழ்வை ரசித்து வாழ வேண்டாமா? தனது கனவு வீட்டை ரசித்து ரசித்துக் கட்டியவர்களுள் வெகு சிலரே அதன் உள்ளலங்காரத்துக்கும் அதே அளவு முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றனர். நம் ரசனைக்கேற்ற உள்ளலங்காரம் அமைந்த வீட்டில் வாழ்வது நம்மை எப்போதும் புத்துணர்வோடு வைத்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதிலும் கலை உணர்வோடு கூடிய ஓவியங்கள் நிறைந்த உள்ளலங்காரம் பார்ப்போரை இன்பத்தில் ஆழ்த்தும். தற்போது வீட்டின் உள்ளலங்காரத்தை வடிவமைப்பதில் ஓவியங்கள் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன.

மனிதனுக்கும் ஓவியத்துக்கும் உள்ள தொடர்பு நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து வருவது. மனிதன் தன் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்திய முதல் ஊடகமே ஓவியங்கள் தான். தான் பார்த்து வியந்தவற்றைக் குகைகளில் கிறுக்கல்களாக வரையத் தொடங்கினான் ஆதி மனிதன். பின்னாளில் இதிகாசங்கச் சம்பவங்களைக் கோயில்களின் சுவரில் ஓவியங்களாக்கினான். படைப்பாற்றலின் உச்சத்தை ஆதிக் கலையான ஓவியத்தில் கண்டான் மனிதன். அஜந்தா, எல்லோரா, பாக், சித்தன்னவாசல் மற்றும் கேரளாவின் சில இடங்களில் இன்றும் பழங்கால ஓவியங்களின் மீதத்தைப் பார்க்கலாம். அவை இன்றும் ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்டு வருகின்றன.

நமது பாரம்பரியமான சுவரோவியக் கலையும் மேற்கத்திய கலப்பால் நவீன வடிவத்துக்கு மாறியுள்ளது. உள்ளலங்காரப் பணிகளில் ஓவியங்களுக்கு தற்போது கொடுக்கப்படும் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நம் ரசனைக்கேற்ற ஓவியங்களைச் சுவர்களில் தீட்டி வைக்கும்போது அது வீட்டிற்கு அழகைக் கூட்டுவது மட்டுமல்லாது வீட்டிற்கு வருவோர்க்கு நம் கருத்தோட்டத்தை விளங்கவைக்கும் வகையிலும் அமைகிறது. வீட்டை ஓவியங்களால் அழகுபடுத்துவது எப்படி என்பதைப் பார்ப்போமா?

# நீங்கள் தீவிர இசைப் பிரியர் என்றால் அது சம்பந்தப்பட்ட ஓவியங்களை வரைந்து வைக்கலாம்.

# வண்ணங்களால் நிறைந்த ‘அப்ஸ்ட்ராக்ட் (abstract)’ வகை ஓவியங்களை வீட்டின் சுவரில் மாட்டி வைக்கலாம். அவை வீட்டுக்கு வரும் விருந்தினரின் கவனத்தைக் கண்டிப்பாக ஈர்க்கும். ஒரு நிமிடமாவது நின்று பார்த்துவிட்டுத்தான் போவார்கள்.

# ஒவ்வொரு அறைக்கும் ஏற்றவாறு ஓவியங்களைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். உதாரணமாகக் குழந்தைகளின் அறையில் அவர்களுக்குப் பிடித்த கார்ட்டூன் மாதிரியான ஓவியங்களை அமைக்கலாம். படுக்கை அறையில் மனதுக்குப் பிடித்த ரம்மியமான சூழலை வரைந்து வைக்கலாம்.

# சாதாரண ஓவியங்களாக இல்லாமல் 3டி ஓவியங்களை அமைக்கலாம். அவை உங்கள் அறையை சுவாரஸ்யமானதாக வைத்திருக்கும்.

# குடும்ப நபர்களின் படங்களை ‘கொலாஜ்' மாதிரி அமைத்து அதைச் சுற்றி அலங்காரமாக வரைந்து வைக்கலாம். பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

# சுவர்களில் ஓவியங்கள் வரைவதற்குப் பதிலாக ‘வால் பேப்பர்’ எனப்படும் ஸ்டிக்கர்களை ஒட்டலாம். அவை பல்வேறு வகைகளில் விதவிதமாக ரெடிமேடாக கிடைக்கின்றன. தேவைப்படும்போது மாற்றிக்கொள்ளவும் முடியும்.

# ஓவியங்களுக்கு ஏற்றாற்போல் ஒளியமைப்பு செய்தால் வீடு இன்னும் சிறப்பாக இருக்கும்.

# வெறும் ஓவியமாக மட்டுமல்லாமல் சுவர்களில் உலோகம் மற்றும் மரத்தாலான வித்தியாசமான அலங்கார வடிவங்கள், அலமாரிகள் போன்றவற்றை அமைக்கலாம். இந்த மாதிரியான அமைப்புகள் தனிக் கவனத்தைப் பெறும்.

# சுவர்களில் உங்களுக்குப் பிடித்த கருத்துகள், தத்துவங்கள் போன்றவற்றை அழகாக எழுதியும் வைக்கலாம். இதுவும் வித்தியாசமாக இருக்கும். இதன் மூலம் வீட்டுக்கு வருவோரின் மனதில் நல்ல கருத்துகள் பதியலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x