பயணங்கள் முடிவதில்லை: காதலைச் சொன்ன கணவர்

பயணங்கள் முடிவதில்லை: காதலைச் சொன்ன கணவர்

Published on

தோழி தேவியின் கேரளப் பயண அனுபவம் எனது ஏற்காடு பயணத்தைப் பகிர்ந்துகொள்ளத் தூண்டியது. அலுவலகப் பணி நிமித்தமாக மூன்று நாள்கள் ஏற்காடு செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. குழந்தைகளை மூன்று நாள்கள் பிரிய மனமில்லை. ஆனால், என் கணவர் என்னை ஊக்கப்படுத்தி, குழந்தைகளைத் தான் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்தார். “நீ உனது சௌகரியமான வட்டத்தை விட்டு வெளியே வா. உலகத்தைத் தனியே பார்க்கப் பழகு” என அவர் உற்சாகப்படுத்த என் பயணத்தைத் தொடங்கினேன். ரயில் நிலையத்தில் வழியனுப்ப வந்த என்னவருக்கு நண்பர்கள் என் பயணப் பாதுகாப்பை உறுதிசெய்தனர்.

பல்வேறு பகுதிகளைச் சேர்த்த புதிய நண்பர்கள் இந்தப் பயணத்தில் அறிமுகமானார்கள். மறுநாள் பயிற்சிக்குப் பின் கிடைத்த ஓய்வு நேரத்தில் ஏற்காட்டைச் சுற்றிப் பார்க்க எண்ணினேன். தோழிகள் சிலர் தயங்கினர். ‘இது நமக்கே நமக்கான நேரம். இதைப் பயனுள்ளதாக நாம் செலவிட வேண்டும்’ என்பதை அவர்களிடம் எடுத்துக்கூறி குழுவாகக் கிளம்பினோம். அனைத்து இடங்களிலும் ஒளிப்படம் எடுத்து மிக மகிழ்ச்சியாகத் திரும்பினோம். நாங்கள் தங்கியிருந்த இடத்தில் ‘கேம்ப் ஃபயர்’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இளையோர், மூத்தோர் என இருந்த கூட்டத்தில் ஒருவித இறுக்கம் நிலவியது. நான் முதலில் கைதட்டி உற்சாகமாக ஆட ஆரம்பிக்க என்னைப் பார்த்து நண்பர்களும் என்னுடன் கைகோத்தனர். அதன் பிறகு சுமார் ஒன்றரை மணி நேரம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக ஆடிப் பாடினோம்.

இங்கே நடந்ததை என் கணவரிடம் பகிரலாம் என அலைபேசியை எடுக்க, என்னவரிடம் இருந்து மூன்று வரிகளில் அழகான கவிதை ஒன்று வந்திருந்தது. சில நிமிடங்கள் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இது உண்மைதானா என்று மலைத்துநின்றேன். என் 20 ஆண்டு மணவாழ்க்கையில் முதல் முறையாக என்னவர் எனக்காக எழுதிய கவிதை. திக்குமுக்காடிவிட்டேன். புதிய இடத்தில் புது நண்பர்களோடு என் தயக்கத்தை உடைத்தெறிந்த மகிழ்ச்சியோடும் என் கணவரின் நிபந்தனையற்ற அன்போடும் ஆதரவோடும் எனது பயணம் இனிதாக முடிந்தது. வாழ்க்கை மிகவும் அழகானது, எப்போதும் நேர்மறை எண்ணங்களோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை இந்தப் பயணம் எனக்கு உணர்த்தியது.

- த.நளினி, சென்னை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in