Last Updated : 12 Oct, 2014 03:03 PM

 

Published : 12 Oct 2014 03:03 PM
Last Updated : 12 Oct 2014 03:03 PM

சப்பாத்தி தொழிலில் சாதிக்கும் பெண்கள்

ஆணுக்கு நிகராகப் பெண்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேறுவதற்கு கல்வி ஒரு முக்கிய கருவி. படித்தப் பெண்கள் பாரையே ஆளலாம். ஆனால் படிப்பறிவில்லாத எளிய பெண்கள் முன்னேற என்ன வழி? இந்தக் கேள்வியோடு மலைத்து உட்காராமல், கல்வியில்லை என்றாலும் முன்னேற வழி இருக்கிறது என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள். தங்கள் முன்னேற்றத்துக்கான களமாக சுயஉதவிக் குழுக்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

சிறுபான்மை மொழி பேசும் இந்தப் பெண்கள் தன்னம்பிக்கை, உழைப்பு, சுயசார்பு, முன்னேற்றம் ஆகியவற்றை வளர்க்கும் விதமாக விவசாயப் பணிகளுடன், சப்பாத்தி தயாரிக்கும் தொழிலில் சாதனை படைத்துவருகின்றனர்.

உதவிக் குழுவின் பாதையில்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தில் டி.வி.எஸ். நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது இந்த சப்பாத்தி தயாரிக்கும் தொழில். சிவசக்தி, புவனேஸ்வரி, மாரியம்மன், கோகுல லட்சுமி, ஓம்சக்தி, திருவேணி ஆகிய ஆறு மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 72 பெண்கள் இதில் பணியாற்றிவருகிறார்கள். இவர்கள் தயாரிக்கும் சப்பாத்தி, கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூர் பகுதியில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது.

சுத்தம் நிறைந்திருக்கும் அறையில் சில பெண்கள் மாவு உருண்டைகளை சப்பாத்திகளாகத் தேய்க்க, சிலர் அவற்றை தணலில் போட்டு வாட்டியெடுக் கிறார்கள். அவற்றைச் சில பெண்கள் நேர்த்தியாக அடுக்கி, டெலிவரிக்கு ஏற்ப தயார் செய்கிறார்கள்.

“எங்கள் கிராமத்தில் உள்ள பெண்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும், சுயமாகச் சம்பாத்தித்து சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்கிற நோக்கத்தை இந்தத் தொழில் நிறைவேற்றுகிறது. தவிர பொருளாதார நிலையில் எங்களை உயர்த்திக் கொள்ளவும் இது உதவுகிறது. நாங்கள் கடந்த 7 ஆண்டுகளாக சப்பாத்தி செய்யும் தொழிலைச் செய்துவருகிறோம். எங்கள் பணிகளை சுழற்சி முறையில் பிரித்து வேலை செய்கிறோம்” என்கிறார்கள் இங்கு பணிபுரியும் பெண்கள்.

ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் சப்பாத்திகள் வரை இங்கே தயாரிக்கப்படுகின்றன. ஒரு சப்பாத்தியை 1 ரூபாய் 65 பைசாவுக்கு விற்பனை செய்கிறார்கள். இவர்கள் தயாரிக்கும் சப்பாத்திகள் டி.வி.எஸ்., எஸ்.எஸ்.எல்., அசோக் லேலண்ட் போன்ற பெரிய நிறுவனங் களுக்கு அனுப்பப்படுகின்றன.

தரத்துக்கு முக்கியத்துவம்

சப்பாத்தி தயாரிக்கத் தேவையான பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் என்பதில் இவர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையே பயன்படுத்துகிறார்கள். தினமும் அதிக அளவு சப்பாத்திகள் செய்ய வேண்டி உள்ளதால், இரண்டு இரண்டு குழுக்களாகப் பிரிந்து வாரம் முழுக்க வேலைசெய்கிறார்கள். மாதத்துக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்கிறார்கள்.

வார நாட்களைப் பிரித்து வேலை செய்வதால் ஒருவருக்கு மாதம் 8 நாட்கள் மட்டும் வேலை கிடைக்கும். இதன் மூலம் மாதம் ரூ.2500 முதல் ரூ.3500 வரை வருமானம் கிடைக்கிறது. ஆர்டர் கூடுதலாகக் கிடைக்கும் நாட்களில் அனைவரும் சேர்ந்து வேலைசெய்கிறார்கள். வேலை இல்லாத நாட்களில் விவசாயப் பணிகள் உள்ளிட்ட மற்ற பணிகளுக்குச் செல்கிறார்கள். வாய்ப்பு இல்லையே என்று சோர்ந்துவிடாமல் வாய்ப்பை உருவாக்கி, சொந்தக் காலில் நிற்கும் இந்தப் பெண்கள் வாழ்க்கை மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x