Last Updated : 22 Mar, 2023 02:02 PM

 

Published : 22 Mar 2023 02:02 PM
Last Updated : 22 Mar 2023 02:02 PM

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

உயிர் வாழ நீர் அவசியம்

பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான அடிப்படை விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது நீர். ஆழ்கடலில் வாழும் உயிரினங்களுக்கும் பாலைவனத்தில் வாழும் உயிரினங்களுக்கும் நீரின்றி வாழ்க்கை இல்லை. நீரே பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. மற்ற கோள்களில் உயிரினங்களைத் தேடும் விஞ்ஞானிகள் முதலில் நீர் இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்கள்.

பெரும்பாலானது கடல் நீரே!

பூமியில் இருக்கக்கூடிய 95.5 சதவீத நீர் கடல்களில் இருக்கிறது. பூமியின் மேற்பரப்பு 71 சதவீதம் நீரால் சூழப்பட்டிருக்கிறது. 0.001 சதவீத நீர் வளிமண்டலத்தில் நமக்கு மேலே மிதக்கிறது. அந்த நீர் அனைத்தும் ஒரே நேரத்தில் மழையாகப் பெய்தால், பூமி ஓர் அங்குல உயரத்துக்கு நீரைப் பெறும்.

சுத்தமான நீர்

68 சதவீத நன்னீர் பனிக்கட்டியாக உறைந்திருக்கிறது. மீதி 30 சதவீத நீர் நிலத்தடியில் இருக்கிறது. மீதி 2 சதவீத நீர் நன்னீர் ஏரி, ஆறு, ஓடை, நிலத்தடிநீராக இருக்கிறது.

உப்பு நீர்

கடல் நீரில் உப்பு அதிகம் இருக்கும் என்றாலும் எல்லாக் கடல்களிலும் ஒரே அளவில் உப்பு இருப்பதில்லை. பசிபிக் பெருங்கடலைவிட அட்லாண்டிக் பெருங்கடலில் உப்பு அதிகம். பெரும்பாலான கடல் உப்புகள் ஒரே தன்மையுடையவை. அதாவது நாம் உணவுக்குப் பயன்படுத்தும் சோடியம் குளோரைடு.

ஒரு துளி நீரில்...

ஒரு துளி நீரில் லட்சக்கணக்கான பாக்டீரியாக்களும் வைரஸ்களும் இருக்கின்றன. அவற்றோடு மீன் முட்டைகள், சிறு புழுக்கள் போன்றவையும் இருக்கலாம்.

மிதக்கும் பனிக்கட்டிகள்!

பொதுவாகத் திடப்பொருள்கள் உருவாகும்போது, அணுக்கள் நெருங்கிவந்து அடர்த்தியைக் கொடுக்கின்றன. இதனால்தான் பெரும்பாலான திடப்பொருள்கள் நீரில் மூழ்கிவிடுகின்றன. அப்படி என்றால், பனிக்கட்டி எப்படி நீரில் மிதக்கிறது? பனியின் அடர்த்தி குறைவாக இருக்கிறது. பனி உருவாகும்போது நீர் மூலக்கூறுகள் வளையங்களை உருவாக்குகின்றன. இதனால் அந்த இடங்களில் அடர்த்தி குறைகிறது. எனவேதான் பனிக்கட்டி நீரில் மிதக்கிறது. ஒருவேளை பனிக்கட்டி மூழ்கினால், கடல்களே உறைந்துவிடும்!

நீரால் ஆனது உடல்

பிறந்த குழந்தையின் உடலில் 78 சதவீதம் நீர் இருக்கிறது. பெரிய மனிதர்களின் உடலில் 55-60 சதவீதம் நீர் இருக்கிறது. நீரின் பங்களிப்பு இல்லாமல் உடலில் இயக்கம் இல்லை. ரத்தம்தான் செல்களுக்குத் தேவையான சத்துகளைக் கொண்டு சேர்க்கிறது. நீர்தான் கழிவை வெளியேற்றுகிறது. உடலின் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்திருக்கிறது. மூளையும் முதுகெலும்பும் அதிர்ச்சியால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது.

தாவரங்களில் நீர்

தாவரங்களில் நீர் பூமியின் ஈர்ப்பு விசையை மீறி மேலே செல்கிறது. தாவரங்களின் வேர்களிலிருந்து இலைகள் வரை தண்ணீரைப் பெற உதவுகிறது. நீர் மூலக்கூறுகள் தாவரத்தில் உள்ள சைலம் எனப்படும் மெல்லிய இழைகள் மூலம் மேலே செல்கின்றன. மேலே உள்ள இலைகளிலிருந்து நீர் ஆவியாகும்போது அவை மேல்நோக்கி இழுக்கப்படுகின்றன.

இப்படித் திட, திரவ, வாயு என மூன்று வெவ்வேறு நிலைகளில் தண்ணீரை நாம் அனுபவித்து வருகிறோம். தண்ணீரைச் சேமிப்போம், சிக்கனமாகப் பயன்படுத்துவோம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x